சென்னை: அஜித்குமார் நடித்த 'குட் பேட் அக்லி' திரைப் படத்தில் அனுமதி பெறாமல் தனது பாடல்களை பயன்படுத்தியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இசையமைப்பாளர் இளையராஜா வழக்குத் தாக்கல் செய்துள்ளார். ரூ.5 கோடி இழப்பீடு கோரி அனுப்பிய நோட்டீஸ்க்கு, சட்டப்பூர்வ உரிமையாளரிடம் இருந்து பாடல்களை பயன்படுத்த அனுமதி பெற்றதாக தயாரிப்பு நிறுவனம் கூறியதாகவும், அந்த உரிமையாளர் யார் என்பதை தெரிவிக்கவில்லை என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
மேலும் தனது அனுமதி பெறாமல் தனது பாடல்களை பயன்படுத்தியது பதிப்புரிமை சட்டத்திற்கு விரோதமானது என்றும் மனுவில் இளையராஜா குறிப்பிட்டுள்ளார். இளையராஜா சார்பில் அவரது வழக்கறிஞர்கள் கே.தியாகராஜன், ஏ.சரவணன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு வரும் செப்டம்பர் 8ம் தேதி விசாரணைக்கு வருகிறது.