சென்னை: சென்னை ஐஐடி,‘‘இன்வென்டிவ் (IInvenTiv) 2025’’ என்ற இந்தியாவின் மிகப்பெரிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாடுக் கண்காட்சியை பிப்ரவரி 28ம் தேதி மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தொடங்கி வைக்கிறார். மத்திய கல்வி அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கண்காட்சியில் என்ஐஆர்எப் தரவரிசையில் இடம்பெற்றுள்ள ஐஐடி-கல்வி நிறுவனங்கள் என்ஐடி-க்கள், ஐஐஎஸ்இஆர்-கள் மற்றும் என்ஐஆர்எப் தரவரிசையில் இடம்பெற்ற 50 முதன்மைக் கல்வி நிறுவனங்களின் புத்தம்புது கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட இருக்கின்றன.
இதுகுறித்து சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி கூறியதாவது: விக்சித் பாரத்-2047ல் இந்திய தொழில்நுட்பத்திலும் புதிய கண்டுபிடிப்புகளிலும் முன்னோடி நிலையை அடையும். அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் தங்களின் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தவும், தாங்கள் தொழில் ஊக்குவிப்பு செய்யும் நிறுவனங்களுக்கு தொழில்நுட்ப பரிமாற்றங்கள், சந்தைக்கான ஒத்துழைப்பை ஏற்படுத்தவும் இன்வென்டிவ் ஒரு தளமாக அமைந்துள்ளது. இந்திய அரசின் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பிப்ரவரி 28 ந் தேதி ஐஐடி வளாகத்தில் முன்னணித் தொழில்துறையினர், கல்வியாளர்கள் முன்னிலையில் இன்வென்டிவ் 2025 ஐத் தொடங்கி வைக்கவிருக்கிறார்.
பங்கேற்கும் கல்வி நிறுவனங்களின் தயாரிப்புகளைக் காட்சிப்படுத்தும் வகையில் பல்வேறு 183 அரங்குகள், கருப்பொருள்கள் தொடர்பான உரைகள், குழு விவாதங்கள் என இந்நிகழ்வு வடிவமைக்கப்பட்டுள்ளது. மிராக்கிள் ஆன் வீல்ஸ் என்கின்ற மாற்றுத் திறனாளிகளின் பிரமாண்ட கலை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு கல்வி நிறுவனத்திற்கு 8 ஸ்டால்கல் கொடுக்கப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக 262 கண்டுபிடிப்புகள் விண்ணப்பம் செய்ததில் 183 கண்டுபிடிப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டது.
சென்னை ஐஐடி கடந்தாண்டு 400 கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெற்றுள்ளது. இந்த ஆண்டும் 400 கண்டுபிடிப்புக்கு காப்புரிமை பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மருத்துவம் சார்ந்த உபகரணங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளது. வளர்ந்து வரும் விமான போக்குவரத்து தேவைக்கேற்பவும்., நிலையான நீடித்த வளர்ச்சி எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்களின் கண்டுபிடிப்புகள் அரங்குகளில் காட்சிப்படுத்தப்பட உள்ளன. இவ்வாறு இயக்குநர் காமகோடி தெரிவித்தார்.