சிட்னி: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான ஸ்ரேயாஸ் அய்யர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியின்போது அலெக்ஸ்கேரி அடித்த பந்தை கேட்ச் பிடித்தபோது படுகாயம் அடைந்தார். உடனடியாக அவர் சிட்னியில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நினைத்ததை விட அவருடைய காயம் மிகவும் அபாயகரமாக இருந்ததால் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். விலா எலும்பில் ஸ்ரேயாஸ் அய்யருக்கு காயம் ஏற்பட்டிருந்த நிலையில், அவருக்கு ரத்தக் கசிவு ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர் உடனடியாக ஐசுயூவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதையடுத்து பிசிசிஐயின் மருத்துவ குழு உடனடியாக ஸ்ரேயாஸ் அய்யர் குறித்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் தற்போது ஸ்ரேயாஸ் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாகவும் ஐசியூவில் இருந்து வெளியே வந்துவிட்டதாகவும் பிசிசிஐ தரப்பு தெரிவித்துள்ளது.
ஸ்ரேயாஸ் குடும்பத்தினர் ஆஸ்திரேலியா செல்ல விசா நடைமுறைக்கு விண்ணப்பித்திருந்த நிலையில் சிட்னியில் உள்ள அவரது நண்பர்கள் பத்திரமாக பார்த்துக் கொள்வதாகவும் பயப்படும் படி வேறு எதுவும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை ஸ்ரேயாஸ் மருத்துவமனையில் இருந்து எப்போது வெளியே வருவார்? எப்போது நாடு திரும்புவார் என்பது குறித்து தெளிவான தகவல் இல்லை. இன்னும் 2 நாட்கள் அவர் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்.
இந்திய அணியின் துணை கேப்டனாக விளங்கும் ஸ்ரேயாஸ் ஒரு மாத காலத்திற்கு எந்தவித கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்கமாட்டார் என தெரிகிறது. இதனால் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக வரும் நவம்பர் 30ஆம் தேதி தொடங்கும் மூன்று ஒருநாள் போட்டியில் ஸ்ரேயாஸ் இடம்பெறுவது சந்தேகம் என தெரிகிறது. இந்திய அணி டி20 தொடரில் பங்கேற்பதற்காக கென்பேரா சென்ற நிலையில் பிசிசிஐ மருத்துவ குழுவில் இடம் பெற்றிருக்கும் முக்கிய மருத்துவர்கள் சிட்னியிலேயே தங்கி ஸ்ரேயாஸ் அய்யரை கண்காணித்து வருவதாக கூறப்படுகிறது.
