Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நாமக்கல்லில் பயங்கரம்: மனைவியை அடித்து கொன்று தூக்கில் தொங்க விட்ட கணவன்

நாமக்கல்: இளம்பெண் தற்கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட வழக்கில், அவரது கணவனே அடித்து கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டது அம்பலமாகியுள்ளது. நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் அடுத்த மேல்முகம் கிராமத்தை சேர்ந்தவர் தனபால் (44), விசைத்தறி கூலி தொழிலாளி. இவரது மனைவி கீதா (33). 8 மற்றும் 3 வயதில் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். குடிப்பழக்கம் கொண்ட தனபால், அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்ததால் கணவன், மனைவியிடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று முன்தினம் தனபால் மதுபோதையில் வந்ததால், மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இரவு 11 மணியளவில், வீட்டில் உள்ள அறையில் கீதா தூக்கில் சடலமாக தொங்கினார். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார், கீதாவின் சடலத்தை மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே, கீதாவின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது சகோதரி பிரியங்கா (37) தெரிவித்தார். தனது தங்கைக்கும், அவரது கணவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதுபற்றி பலமுறை என்னிடம் அவர் போன் மூலம் தெரிவித்துள்ளார். மேலும் அவரது உடலில் கால் மற்றும் தலையில் காயங்கள் உள்ளது. இதனால் அவரை கொலை செய்து, உடலை தூக்கில் தொங்க விட்டிருக்கலாம் என சந்தேகம் உள்ளதாக போலீசாரிடம் தெரிவித்தார். ஆனால் தனபாலின் பெற்றோர் கீதா தற்கொலை செய்து கொண்டதாக போலீசாரிடம் தெரிவித்தனர். இந்நிலையில், நேற்று மதியம் தனபால், மல்லசமுத்திரம் போலீஸ் ஸ்டேஷனில், கீதாவை கொன்றதாக கூறி சரணடைந்தார். போலீசாரிடம் தனபால் கூறியதாவது: கடந்த 27ம் தேதி, கீதா என்னுடன் தகராறில் ஈடுபட்டு, கர்நாடக மாநிலம் சிக்கமங்களூரில் உள்ள அவரது சகோதரி வீட்டுக்கு சென்று விட்டார்.

அந்த சமயத்தில், வீட்டில் கீதா வளர்த்து வந்த பசுமாட்டையும், கன்றையும் விற்று விட்டேன். பின்னர், 2ம்தேதி திரும்பி வந்த கீதா, வீட்டில் மாடு இல்லாதது குறித்து கேட்டு என்னுடன் சண்டையிட்டார். அப்போது, அவரை தாக்கினேன். 3ம்தேதி மீண்டும் இருவருக்கும் சண்டை ஏற்பட்டபோது, ஆத்திரமடைந்த நான், அவரது தலையை பிடித்து தரையில் மோதியதில், அவரது மண்டை உடைந்தது. அதன்பிறகு, துண்டால் அவரது கழுத்தை நெரித்ததில் அவர் இறந்து விட்டார். அவரை கொலை செய்ததை மறைப்பதற்காக, தூக்கில் தொங்க விட்டேன். ஆனால், எப்படியும் போலீசாரிடம் மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தால் சரணடைந்து விட்டேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். இதையடுத்து, அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்த போலீசார், திருச்செங்கோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று மாலை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

எங்களுக்குள் சண்டை ஏற்பட்டபோது, ஆத்திரமடைந்த நான், அவரது தலையை பிடித்து தரையில் மோதியதில், அவரது மண்டை உடைந்தது. அதன்பிறகு, துண்டால் அவரது கழுத்தை நெரித்ததில் அவர் இறந்து விட்டார்.