*தஞ்சாவூர் அருகே சோகம்
வல்லம் : தஞ்சாவூர் அருகே திருநகர் எக்ஸ்டென்ஷன் வெங்கடேசபுரம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் பாபு (45). இவரது மனைவி அமுதா. இந்நிலையில் சுரேஷ்பாபு வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். இதனால் கணவன், மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று முன்தினம் இது குறித்து மீண்டும் அமுதாவிற்கும், சுரேஷ்பாபுவிற்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமடைந்த அமுதா நேற்று முன்தினம் இரவு விஷம் குடித்துள்ளார்.
நேற்று அதிகாலை எழுந்த சுரேஷ் பாபு தன் மனைவி பேச்சு மூச்சின்றி கிடப்பதை பார்த்த அதிர்ச்சி அடைந்தார். அப்போதுதான் அமுதா விஷம் குடித்தது தெரியவந்துள்ளது. இதில் பயந்துபோன சுரேஷ்பாபுவும், விஷம் குடித்து மயங்கி விழுந்தார்.
காலை வெகு நேரமாகியும் இவர்கள் வீட்டு கதவு திறக்கப்படாதால் அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்து கள்ளப்பெரம்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது அமுதா இறந்து கிடந்துள்ளார். சுரேஷ்பாபு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தார். உடனே அவரை சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
மேலும் இறந்த அமுதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த சுரேஷ் பாபுவும் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து கள்ளப்பெரம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் தஞ்சை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.