Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆளுநருடன் எச்.ராஜா சந்திப்பு

சென்னை: தமிழக ஆளுநர் ஆர்‌.என்.ரவியை, பாஜ ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா மரியாதை நிமித்தமாக நேற்று சந்தித்துப் பேசினார். தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை 3 மாத பயணமாக லண்டன் சென்றதை அடுத்து கட்சியை வழிநடத்துவதற்காக மூத்த தலைவர் எச்.ராஜா தலைமையில் 6 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எச்.ராஜா நேற்று கிண்டி ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ரவியை திடீரென நேரில் சந்தித்து பேசினார். சந்திப்புக்கு பின்னர் எச்.ராஜா‌ அளித்த பேட்டியில் கூறியதாவது: மரியாதை நிமித்தமாக ஆளுநரை சந்தித்தேன். வாழ்த்து பெற்றேன். குறிப்பிடும்படி ஒன்றுமில்லை. கட்சி விதிகளின் படி 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை அகில இந்திய தலைவர் முதல் அனைவரும் கட்சி உறுப்பினர் அட்டையை புதுப்பிக்க வேண்டும். அதன்படி இன்று தொடங்கி 45 நாட்கள், அக்டோபர் 15 வரை இந்த பணிகள் நடைபெறும்.

ஒரு பூத்துக்கு 400 பேரை கட்சியில் சேர்க்க வேண்டும் என்று டெல்லி தலைமை அறிவுறுத்தியுள்ளது. அதன் அடிப்படையில், தமிழகத்தில் 1 கோடி பேரை சேர்ப்பதற்கான பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. இன்று மாலை 5 மணிக்கு பிரதமர் மோடி தன்னுடைய உறுப்பினர் சேர்க்கையை புதுப்பிக்கிறார். அதனை தொடர்ந்து மாலை 6 மணிக்கு சென்னை கமலாலயத்தில் மாநில நிர்வாகிகள், ஒருங்கிணைப்பாளர்கள் தங்கள் உறுப்பினர் சேர்க்கையை புதுப்பிக்க உள்ளனர். இவ்வாறு அவர் கூறினர். பாஜ கார்ப்பரேட் நிறுவனம் போல் செயல்படுகிறது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறிய கருத்துக்கு பதிலளித்த எச். ராஜா, ‘‘அதிமுக எப்படி செயல்படுகிறது. எடப்பாடி அதிமுகவுக்கு எம்.டி-யா? நான் பாஜவில் 35 ஆண்டுகளாக கட்சி பொறுப்பில் இருக்கிறேன். பல அதிமுக அமைச்சர்கள் அரசியலுக்கு வருவதற்கு முன்பே நான் கட்சியில் இருக்கிறேன்” என்று பதில் அளித்தார்.