திருச்சி: திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு அளித்த பேட்டி: திருச்சி எந்தளவுக்கு வளர்ந்துள்ளது என்பது குறித்து திருச்சியில் உள்ள, திருச்சியில் வாழக்கூடிய பொதுமக்களுக்கு தெரியும். நான்கரை ஆண்டுகளில் எண்ணற்ற திட்டங்களை திருச்சியில் நிறைவேற்றியுள்ளோம். வெளியிலிருந்து வந்தவர்களுக்கு அது தெரியாது. தமிழ்நாட்டில் எத்தனை கட்சிகள் உருவானாலும் 2026ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும். மு.க.ஸ்டாலின் மீண்டும் இரண்டாவது முறையாக முதல்வராக உறுதியாக பொறுப்பேற்பார். வெளிநாட்டு நிறுவனங்களோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. திருச்சி மணப்பாறையில் ஜெபல் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தங்களுடைய தொழிற்சாலையை துவங்கவுள்ளனர். அந்த தொழிற்சாலை துவங்கிய பின்பு வேலைவாய்ப்பு பெருகும். திருச்சியின் முகமே மாறிவிடும். புதிய கட்சி தொடங்குபவர்களில் இருந்து அனைத்து கட்சியினரும் திமுகவை விமர்சிக்கின்றனர். மொட்டைமரம் கல்லடிபடாது. காய்த்த மரம் தான் கல்லடி படும். திமுக ஒரு காய்த்த மரம். இவ்வாறு அவர் கூறினார்.
+
Advertisement