சென்னை: தமிழ்நாட்டில் முதல் முறையாக அதிகபட்சம் 2,500 சதுர அடிபரப்பளவு கொண்ட மனையில் 3,500 சதுர அடி அளவிற்குள் கட்டப்படும் குடியிருப்பு கட்டுமானத்திற்கு பொதுமக்கள் சுயசான்றிதழ் முறையில் வீடுகட்டும் கட்டட அனுமதியை இணையதளம் வாயிலாக ஒற்றைச்சாளர முறையில் உடனடியாக ஒப்புதல் பெறும் திட்டம் தற்போது தூண்தளம் மற்றும் இரண்டு தளம் (Stilt + 2 Floors) வரையுள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கும் அறிமுகப்படுத்தபட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் (22.07.2024) அன்று தலைமைச் செயலகத்தில், வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறையின் கீழ் இயங்கும் நகர் ஊரமைப்பு இயக்ககத்தின் சார்பில், தமிழ்நாட்டில் முதல் முறையாக பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் மற்றும் நடுத்தர மக்கள் ஆகியோர் இணையதளம் வாயிலாக சுயசான்றிதழ் அடிப்படையில் அதிகபட்சம் 2,500 சதுர அடிபரப்பளவு கொண்ட மனையிடத்தில் 3,500 சதுர அடி அளவிற்குள் கட்டப்படும் தரைத்தளம் மற்றும் முதல் தளம் (Ground floor + 1 floor) கொண்ட 7 மீட்டர் வரையுள்ள குடியிருப்பு கட்டுமானத்திற்கு உடனடியாக ஒற்றைச்சாளர முறையில் கட்டட அனுமதிகளைப் பெறும் ஒரு ஒருங்கிணைந்த புதிய திட்டத்தைத் தொடங்கி வைத்தார். தற்போது இத்திட்டத்தின் மூலம் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர்.
இத்திட்டமானது மக்களிடம் பெறும் வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில் இத்திட்டத்தினை மேலும் பயனுள்ளதாக்க 2025 2026 -ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் தெரிவித்துள்ளவாறு வாகன நிறுத்துவதற்கான சவால்களை எதிர்கொள்ளும் வகையில் தூண் தளம் மற்றும் இரண்டு தளம் (Stilt + 2 Floors) கொண்ட 10 மீட்டர் வரையுள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கும் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்து உடனடியாக கட்டட அனுமதி பெறுவதற்கு கூடுதல் வசதி 03.09.2025 முதல் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது.