முதன்முறை வீடுகட்டும் கட்டிட அனுமதி; தூண் தளம், 2வது தளம் வரை குடியிருப்புக்கும் அறிமுகம்: இணையதளம் வாயிலாக பெறலாம்
சென்னை: தமிழ்நாட்டில் முதன்முறையாக வீடுகட்டும் கட்டிட அனுமதியை இணையதளம் வாயிலாக ஒற்றைச்சாளர முறையில் உடனடியாக ஒப்புதல் பெறும் திட்டம் தற்போது தூண்தளம் மற்றும் இரண்டு தளம் வரையுள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 22.7.2024 அன்று தலைமை செயலகத்தில், வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சி துறையின் கீழ் இயங்கும் நகர் ஊரமைப்பு இயக்ககத்தின் சார்பில், தமிழ்நாட்டில் முதன்முறையாக பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் மற்றும் நடுத்தர மக்கள் ஆகியோர் இணையதளம் வாயிலாக சுயசான்றிதழ் அடிப்படையில் அதிகபட்சம் 2,500 சதுர அடி பரப்பளவு கொண்ட மனையிடத்தில் 3,500 சதுர அடி அளவிற்குள் கட்டப்படும் தரைத்தளம் மற்றும் முதல் தளம் கொண்ட 7 மீட்டர் வரையுள்ள குடியிருப்பு கட்டுமானத்திற்கு உடனடியாக ஒற்றைச்சாளர முறையில் கட்டிட அனுமதிகளை பெறும் ஒரு ஒருங்கிணைந்த புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார். தற்போது, இத்திட்டத்தின் மூலம் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர்.
இந்த திட்டம் மக்களிடம் பெறும் வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில் இத்திட்டத்தினை மேலும் பயனுள்ளதாக்க 2025-26ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் தெரிவித்துள்ளவாறு வாகன நிறுத்துவதற்கான சவால்களை எதிர்கொள்ளும் வகையில் தூண் தளம் மற்றும் இரண்டு தளம் கொண்ட 10 மீட்டர் வரையுள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கும் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்து உடனடியாக கட்டிட அனுமதி பெறுவதற்கு கூடுதல் வசதி இன்று (3ம் தேதி) முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.