Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ஓசூர் அருகே பல லட்சம் பணம் கொடுத்தும் மிரட்டல் அதிமுக நிர்வாகியின் கார் டிரைவரை கூலிப்படை ஏவி கொன்ற கள்ளக்காதலி: பரபரப்பு வாக்குமூலம்

ஓசூர்: பல லட்சம் பணம் கொடுத்த நிலையில், தினமும் ரூ.2 ஆயிரம் கேட்டு தொந்தரவு செய்ததால், கூலிப்படை ஏவி அதிமுக நிர்வாகியின் கார் டிரைவரை கொன்றதாக கள்ளக்காதலி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே மாரசந்திரம் கிராமத்தை சேர்ந்தவர் ஹரீஷ்(32). திருமணமாகாத இவர், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை தலைவர் பிரசாந்த் என்பவரிடம் கார் டிரைவராக பணியாற்றி வந்தார். மேலும், ரியல் எஸ்டேட் தொழிலுடன் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலும் செய்து வந்தார்.

கடந்த 3ம்தேதி காலை இவர் வானவில் நகர் பகுதியில் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர் ஓட்டி சென்ற ஸ்கூட்டர் அருகிலேயே கிடந்தது. இதுதொடர்பாக அட்கோ போலீசார் விசாரணை நடத்தியதில், ஓசூர் வானவில் நகரைச் சேர்ந்த மஞ்சுளா(35) என்ற பெண்ணுடன் ஹரீஷூக்கு கள்ளத்தொடர்பு இருந்தது தெரிய வந்தது. மஞ்சுளா கணவரை பிரிந்து மகன், மகளுடன் வசித்து வந்தார். கடைசியாக அவரது வீட்டிற்கு டிசம்பர் 2ம்தேதி இரவு ஹரீஷ் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து மஞ்சுளாவிடம் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், அவர் கூலிப்படை ஏவி ஹரீஷை கொலை செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து மஞ்சுளா போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: கணவரை பிரிந்த நான், ஹரீசுடன் தொடர்பில் இருந்தேன். இதனால், என் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றார். என்னிடம் பணம் இருப்பதை அறிந்து, தனக்கு கடன் இருப்பதாக கூறி அடிக்கடி பணம் கேட்டு வந்தார். நானும், அவர் கேட்டபோதெல்லாம் ரூ.10 லட்சம் வரை பணம் கொடுத்தேன். ஒரு கட்டத்தில் வாங்கிய பணத்தை திருப்பி தராமலும், மேலும் பணம் கேட்டு தகராறு செய்தும் என்னை அடித்தார். இதனால் கடந்த பிப்ரவரி மாதம் ஹரீஷ் மீது போலீசில் புகாரளித்தேன். தொடர்ந்து நாங்கள் சமாதானமான நிலையில், கடன் பிரச்னை உள்ளதாக கூறி மீண்டும் பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்தார். தினமும் ரூ.2 ஆயிரம் தர வேண்டும் எனக்கூறி துன்புறுத்தினார்.

இதனால் ஹரீஷ் மீது ஆத்திரமடைந்த நான், அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்து, எனது நண்பரான ஓசூர் டவுனை சேர்ந்த மோனிஷ் (24) என்பவரை அணுகினேன். இதையடுத்து, கூலிப்படையை வைத்து ஹரீசை தீர்த்துக்கட்ட முடிவு செய்தோம். அதற்காக ரூ.10 லட்சம் கொடுப்பதாக கூறி, அட்வான்சாக ரூ.4.50 லட்சம் கொடுத்தேன். பணத்தை வாங்கிக் கொண்ட மோனிஷ் கூலிப்படையை தயார் செய்தார். கடந்த 2ம் தேதி எனது வீட்டிற்கு ஹரீஷ் வருவதை மோனிஷிடம் தெரிவித்தேன். அதை நோட்டமிட்ட மோனிஷ், 10 பேர் கொண்ட கூலிப்படையினருடன் அரிவாளுடன் வந்து ஹரீஷை வெட்டிக் கொன்றனர். இதை போலீசார் கண்டுபிடித்ததால் நானும் மாட்டிக்கொண்டேன்.

இவ்வாறு வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து ஹரீசை கொலை செய்ய திட்டமிட்டு கொடுத்த மஞ்சுளா மற்றும் மோனிஷ்(24), ஓசூரை சேர்ந்த முகமது ரிகான்(21), முஜாமில் (21), முஸ்ரப் (24), சமீர் (21), அபி (எ) சதீஷ்குமார்(19) ஆகிய 7 பேரையும் நேற்று முன்தினம் அட்கோ போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர். மேலும், இந்த கொலையில் தொடர்புடைய கூலிப்படையை சேர்ந்த சதீஸ்(25), சந்தோஷ்(19), விஜயகுமார்(20) ஆகிய 3 பேரை நேற்று போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ஒருவரை தேடி வருகின்றனர்.