Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ஓசூர் அருகே தகாத உறவை கண்டித்ததால் தொழிலாளி கத்தியால் சரமாரி குத்திக் கொலை: மனைவி, கள்ளக்காதலன் உட்பட 4 பேர் கைது

ஓசூர்: ஓசூரில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை, கள்ளக்காதலன் உதவியுடன் கத்தியால் குத்தி கொலை செய்த மனைவி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பார்வதி நகரைச் சேர்ந்தவர் சரவணன் (25), கூலித்தொழிலாளி. இவரது மனைவி முத்துலட்சுமி (21). இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகளாகிறது. இந்த தம்பதிக்கு மூன்றரை மற்றும் ஒன்றரை வயதில் 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், நேற்று காலை, சரவணனின் வீட்டில் அவரது தாய் மங்கம்மாவின் அலறல் சத்தம் கேட்டது. அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்த போது, வீட்டில் சரவணன் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

பக்கத்து அறை பூட்டப்பட்டு இருந்தது. அதை திறந்த போது, உள்ளே சரவணனின் தாய் மங்கம்மா இருந்தார். இது குறித்து அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில், ஓசூர் டவுன் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். சரவணனின் சடலத்தை மீட்டு, ஓசூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனிடையே, ஓசூரிலிருந்து தப்பி செல்ல முயன்ற முத்துலட்சுமி, அவரது கள்ளக்காதலன் சூர்யா, கொலைக்கு உதவிய சந்தோஷ், சக்தி ஆகிய 4 பேரையும், ஓசூர் டவுன் போலீசார் நேற்று காலை கைது செய்தனர்.

விசாரணையில், முத்துலட்சுமி பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் போதே, ஓசூர் பார்வதி நகரைச் சேர்ந்த சூர்யா (23) என்பவரை காதலித்துள்ளார். பின்னர், 4 ஆண்டுகளுக்கு முன்பு சரவணனை காதலித்து, திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் பழைய காதலன் சூர்யாவுடன் கள்ளத்தொடர்பில் இருந்து வந்தார். இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். இது சரவணனுக்கு தெரியவந்ததால், கள்ளத்தொடர்பை கைவிடும்படி மனைவியை கண்டித்துள்ளார். இருப்பினும் அவர் கைவிடவில்லை. இதனால் கணவன், மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதனால், கணவர் மீது ஆத்திரமடைந்த முத்துலட்சுமி, இதுபற்றி கள்ளக்காதலன் சூர்யாவிடம் கூறியுள்ளார். இதனால் சரவணனை கொலை செய்ய திட்டம் தீட்டினர். அதன்படி நேற்று முன்தினம், முத்துலட்சுமியிடம் பேசிய சூர்யா, வீட்டின் கதவை அதிகாலையில் திறந்து வைக்குமாறு கூறியுள்ளார். முத்துலட்சுமியும் நேற்று அதிகாலை, வீட்டு கதவை திறந்து வைத்துள்ளார். அப்போது சூர்யா, நண்பர்களான சக்தி (23), சந்தோஷ் (23) ஆகியோருடன் அங்கு வந்தார். அந்த நேரம் முத்துலட்சுமி, தனது மாமியார் தூங்கிய அறையின் கதவை வெளிப்புறமாக பூட்டினார். பின்னர், அவர்கள் தூங்கி கொண்டிருந்த சரவணனை கத்தியால் குத்தி கொன்று விட்டு தப்பியது விசாரணையில் தெரியவந்தது.