ஓசூர் அருகே நேர்ந்த சோகம்: தெருநாய் கடித்து 20 நாட்களுக்கு பின் வடமாநில தம்பதியின் குழந்தை உயிரிழப்பு!!
கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே தெருநாய் கடியால் பாதிக்கப்பட்ட மூன்றரை வயது குழந்தை 20 நாட்களுக்கு பின் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாசி நாயக்கனப்பள்ளி கிராமத்தில் ராமமூர்த்தி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த நந்தலால் - ரேகா தம்பதியினர் தங்கி கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களது மூன்றரை வயது மகன் சத்யா கடந்த 31ம் தேதி அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தபோது அங்கு சுற்றித்திரிந்த தெரு நாய் கடித்துக் குதறியது.
இதில், சிறுவனுக்கு முகம், தலை, கை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. சிறுவனை மீட்ட பெற்றோர் ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சை முடிந்த பின்னர் சிறுவனை பெற்றோர் வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். இந்நிலையில், வீட்டில் திடீரென மயங்கி விழுந்த சிறுவனை பெற்றோர் மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது பாதி வழியில் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். நாய் கடியின் தாக்கத்தால் சிறுவன் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.