Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

ஓசூரில் ரூ.5 கோடி கேட்டு ரியல் எஸ்டேட் அதிபரை கடத்திய 4 பேர் சிறையில் அடைப்பு: பெண் உள்பட 3 பேருக்கு வலை

ஓசூர்: ஓசூர் அருகே, ரூ.5 கோடி கேட்டு ரியல் எஸ்டேட் அதிபரை கடத்திய வழக்கில் கைதான 4பேர் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் பெண் உள்பட 3 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி பகுதியைச் சேர்ந்தவர் சீதாராமன்(34). திமுக உறுப்பினரான இவர், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். நேற்று முன்தினம், இவரை பெண் ஒருவர் போனில் தொடர்பு கொண்டு வீட்டுமனை வேண்டுமென கூறியுள்ளார். இதனையடுத்து, அவர் தனது காரில் சூளகிரியிலிருந்து பத்தளப்பள்ளிக்கு புறப்பட்டார். அப்போது அவரை மடக்கிய ஒரு கும்பல், அவரின் காரிலேயே கடத்திச் சென்று, ரூ.5 கோடி பணம் கேட்டு மிரட்டியது. மேலும், சீதாராமனிடம் செல்போனை கொடுத்து தெரிந்த நபர்களிடம் பணம் பெற்றுத் தருமாறு கேட்டு கட்டாயப்படுத்தினர். சீதாராமனும் தனக்கு தெரிந்தவர்களிடம் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பணம் கேட்டுள்ளார். அப்போது, கடத்தல் கும்பலுக்கு தெரியாமல், தனது லொகேஷனை ஷேர் செய்துள்ளார்.

இதன் மூலம், அவர் கடத்தப்பட்டதை அறிந்த உறவினர்கள், ஓசூர் அட்கோ காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்பேரில், போலீசார் சீதாராமன் அனுப்பிய லொகேஷன் மூலம், இருப்பிடத்தை கண்டறிந்து கடத்தல் கும்பலை சுற்றி வளைத்தனர். போலீசார் வருவதை கண்ட கும்பல் காரில் தப்ப முயன்றது. அவர்களை அட்கோ மற்றும் டவுன் போலீசார் நாலாபக்கமும் சுற்றி வளைத்து சங்கர் (38), சுரேஷ்(40), அஜய்(19), கோகுலகண்ணன்(23) ஆகியோரை மடக்கி பிடித்தனர். தொடர்ந்து 4 பேரிடம் விசாரணை நடத்தியதில், 8 பேர் கொண்ட கும்பல் கடத்தலில் ஈடுபட்டது தெரிய வந்தது. மேலும், இதுதான் அவர்களின் முதல் கடத்தல் என்பதும் தெரிய வந்தது. 4 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய மோகன், நாகராஜ் மற்றொரு மோகன், ஸ்வேதா என்ற பெண் ஆகிய 4பேரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.