Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

பணய கைதிகளை விடுவிக்க ஹமாஸ் ஒப்புதல் காசா போர் நிறுத்தத்துக்கு தயார்: டிரம்ப் கோரிக்கைக்கு இஸ்ரேல் பதில்

டெல் அவிவ்: “பணய கைதிகளை விடுவிக்கும் ஹமாசின் முடிவை ஏற்று, காசாவில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்த தயாராகி வருகிறோம்” என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் காசா போர் தொடங்கி செவ்வாய்க்கிழமையுடன் (அக்.7) 2 ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்த நீடித்த போரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் உயிரிழந்து விட்டனர். இதேபோல் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி பாலஸ்தீனர்களும் பலியாகி விட்டனர். நீடிக்கும் போரை முடிவுக்கு கொண்டு வர எகிப்து, கத்தார், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தொடர் முயற்சிகளை எடுத்து வருகின்றன.

இதன்ஒரு பகுதியாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த வாரம் 20 அம்ச அமைதி திட்டம் ஒன்றை அறிவித்திருந்தார். டிரம்ப்பின் 20 அம்ச அமைதி திட்டத்தை ஏற்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறினார். ஆனால் டிரம்ப்பின் திட்டம் பற்றி பரிசீலித்து வருவதாக ஹமாஸ் படையினர் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் டிரம்ப்பின் 20 அம்ச அமைதி திட்டத்தின் சில பகுதிகளை ஏற்பதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஹமாஸ் வௌியிட்ட அறிக்கையில், “இஸ்ரேல் பணய கைதிகள் அனைவரையும் விடுவிக்கவும், பாலஸ்தீனர்களிடம் அதிகாரத்தை ஒப்படைக்கவும் தயார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹமாஸ் அமைப்பின் இந்த அறிவிப்புக்கு ஐக்கிய நாடுகள் சபை வரவேற்பு தெரிவித்துள்ளது. மேலும், ஹமாசின் முடிவை வரவேற்றுள்ள கனடா, பிரான்ஸ், இங்கிலாந்து, கத்தார் உள்ளிட்ட நாடுகள், இந்த முடிவு அமைதிக்கான முதற்படி என தெரிவித்துள்ளன.

ஹமாசின் அறிவிப்பை வரவேற்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டிரம்ப் தன் சமூக வலைதளத்தில், “ஹமாஸ் வௌியிட்ட அறிக்கையின்படி, போர் நிறுத்தத்துக்கு அவர்கள்(ஹமாஸ்) தயாராக இருப்பதாக நம்புகிறேன். எனவே, காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் உடனே நிறுத்த வேண்டும். அப்போதுதான் பணய கைதிகளை பாதுகாப்பாகவும், விரைவாகவும் வௌியேற்ற முடியும்” என தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து டிரம்ப்பின் முதல்கட்ட அமைதி திட்டத்தை செயல்படுத்த இஸ்ரேல் தயாராகி வருவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இஸ்ரேல் அதிகாரிகள் கூறுகையில், “இஸ்ரேல் காசா மோதலை முடிவுக்கு கொண்டு வர உலக நாடுகள் மற்றும் அதிபர் டிரம்ப் ஆகியோர் கொடுத்த அழுத்தத்தை பிரதமர் நெதன்யாகு எதிர்கொண்டார். அமெரிக்க நிர்வாகத்தின் அழுத்தம் காரணமாக டிரம்ப்பின் 20 அம்ச திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகளை இஸ்ரேல் தொடங்கி உள்ளது.

திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்கூட்டிய தயார் நிலையில் இருக்கும்படி இஸ்ரேல் ராணுவத்துக்கு தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர். காசா மீது தீவிர தாக்குதல் நடத்தப்படாது. ஹமாசுடன் பேச்சுவார்த்தை நடத்தி பணய கைதிகளை பாதுகாப்பாக மீட்டு வர பேச்சுவார்த்தை குழு ஒன்று தயாராகி வருகிறது. ஆனால் பணய கைதிகளை திரும்ப அழைத்து வருவதற்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை” என்று தெரிவித்தனர்.