*ஜோலார்பேட்டை அருகே பரபரப்பு
ஜோலார்பேட்டை : திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரி ஊராட்சி, சின்ன கவுண்டனூர் கிராமத்தை சேர்ந்தவர் அருள்பாண்டி(38), லாரி டிரைவர். இவரும் அதே பகுதியை சேர்ந்த அம்மு(30) என்பவரும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில், அருள்பாண்டிக்கும், அம்முவின் நெருங்கிய உறவினர் ஒருவரது மனைவிக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த குடும்பத்தினர் இருவரையும் கண்டித்து வந்துள்ளனர். ஆனாலும், கள்ளக்காதலியை கைவிட மறுத்த அருள்பாண்டி, யாருக்கும் தெரியாமல் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அவரை திருமணம் செய்து கொண்டு ரகசியமாக வாழ்ந்து வந்தாராம்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அருள்பாண்டி தனது கள்ளக்காதலியை வீட்டிற்கு அழைத்து கொண்டு வந்து, தனது மனைவி அம்முவிடம் `இனிமேல் இவர் என்னுடன் தான் வாழ்வார்’ என கூறினாராம். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில், மனவேதனை அடைந்த அம்மு வீட்டில் திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவலறிந்த ஜோலார்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், அம்முவின் தாயார் ஆனந்தி கொடுத்த புகாரின்பேரில் வழக்கு பதிந்து, தற்கொலைக்கு காரணமான கணவன் அருண்பாண்டியை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவான கள்ளக்காதலியை தேடி வருகின்றனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.