தொடர் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்கள்: கிளாம்பாக்கம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்
சென்னை: தொடர் விடுமுறை முடிந்து சென்னைக்கு மக்கள் திரும்பி வருவதால் கிளாம்பாக்கம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை, காலாண்டு விடுமுறை என தொடர்ச்சியாக விடுமுறை காரணமாக, சென்னை மக்கள் ஒரு வாரத்துக்கு முன்னாகவே தென்மாவட்டங்களுக்கு சென்றிருந்தனர். விடுமுறை முடிந்து இன்று அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் பள்ளிகள் வழக்கம் போல் திறக்கப்பட்டதன் காரணமாக தென்மாவட்டத்தில் இருக்கக்கூடிய மக்கள் நேற்று முதலே சென்னை நோக்கி தொடர்ச்சியாக படையெடுத்து வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில், செங்கல்பட்டு அருகே சிங்கபெருமாள் கோயில் அருகே காலை முதலே கடுமையாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கிளாம்பாக்கம் பகுதி, ஊரப்பாக்கம் பகுதி, வண்டலூர் அருகே கிட்டத்தட்ட 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. திருச்சி, சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடுமையாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடுமையாக இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.