வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்றிட ஓரணியில் தமிழ்நாட்டை திரட்டுவோம்: திமுக இளைஞரணியினருக்கு உதயநிதி ஸ்டாலின் அழைப்பு
சென்னை: வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றிட ஓரணியில் தமிழ்நாட்டை திரட்டுவோம் என்று இளைஞரணியினருக்கு உதயநிதி ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
திமுக இளைஞர் அணி செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ்தள பதிவில் கூறியிருப்பதாவது:
தமிழர்களை உயர்த்தும் திராவிட இயக்கத் தத்துவங்களை அடுத்தடுத்து வரும் இளம் தலைமுறையின் ரத்த அணுக்களில் ஏற்றும் கொள்கைப் பாசறையாம் திமுக இளைஞர் அணி தொடங்கப்பட்ட நாள் இன்று (நேற்று). மதுரை ஜான்சி ராணி பூங்காவில் பூத்த நம் இளைஞரணி, 46ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. கலைஞரின் வழிகாட்டலில் முதல்வர் மு.க.ஸ்டாலினால் உருவாக்கப்பட்ட இளைஞரணி எனும் தீரர் படையின் இன்றைய செயலாளராகப் பணியாற்றுவதை எண்ணி பெருமை கொள்கிறோம்.
தமிழ்நாட்டின் இளைஞர்களை கொள்கை மயப்படுத்தும் இலக்கில் இருந்து சிறிதும் விலகாமல் கட்டுப்பாட்டுடன் கடமையாற்றும் நம் இளைஞரணி, திமுகவின் நாற்றங்காலாக திகழ்கிறது. களப் பணியிலும்-கொள்கை நெறியிலும் இளைய சமுதாயத்தை தயார்படுத்த இளைஞரணி மேற்கொண்டு வரும் பணிகள் இன்னும் நூறு ஆண்டுகளுக்கு தமிழ்நாட்டை காத்து நிற்கும். 2026 சட்டமன்ற தேர்தலில் நம் திமுக அணி, வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றிட ஓரணியில் தமிழ்நாட்டை திரட்டுவோம். தமிழ்நாட்டின் மண்-மொழி-மானம் காக்க, தலைவரின் கட்டளையை நிறைவேற்ற களம் புகுவோம் - பாசிசத்தை நொறுக்குவோம். தமிழ்நாடு வெல்லும். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.