திருவனந்தபுரம்: கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் பிரக்கானம் பகுதியை சேர்ந்தவர் அஜிகுமார் குருப் (59). இவர் கடந்த 23 வருடங்களாக அருகிலுள்ள கோழஞ்சேரி செயின்ட் தாமஸ் மார்த்தோமா சர்ச்சில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட இவர் அங்குள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அஜிகுமார் குருப் நேற்று மரணமடைந்தார். இந்நிலையில் நேற்று அஜிகுமாரின் உடல் மருத்துவமனையில் இருந்து நேராக சர்ச்சுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு வைத்து சிறப்பு பிரார்த்தனையும் நடத்தப்பட்டது. உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். இதன் பின்னர் தான் அஜிகுமாரின் உடல் அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்து மதத்தைச் சேர்ந்த ஒருவரின் உடலுக்கு சர்ச்சில் வைத்து பிரார்த்தனை செய்த சம்பவம் அனைவரையும் நெகிழ வைத்தது.
+
Advertisement