Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இந்தி மொழி ஆய்வாளர் இந்தியாவில் நுழைய தடை: டெல்லியில் பரபரப்பு

புதுடெல்லி: விசா விதிமீறல் குற்றச்சாட்டில், புகழ்பெற்ற இந்தி மொழி ஆய்வாளர் டெல்லி விமான நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட சம்பவம் கல்வியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தின் தலைநகர் லண்டனைச் சேர்ந்த இந்தி மற்றும் தெற்காசிய இலக்கியப் பேராசிரியரான பிரான்செஸ்கா ஓர்சினி, இத்தாலியில் பிறந்தவர் ஆவார். இவர் லண்டனில் உள்ள புகழ்பெற்ற கீழைத்தேய மற்றும் ஆப்பிரிக்க ஆய்வுகள் பள்ளியில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். ஹாங்காங்கில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் பங்கேற்றுவிட்டு, அங்கிருந்து நேற்று டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு அவர் வந்துள்ளார். ஆனால், விமான நிலையத்தில் அவரைத் தடுத்து நிறுத்திய அதிகாரிகள், நாட்டிற்குள் நுழைய அனுமதி மறுத்து, அவரை மீண்டும் லண்டனுக்குத் திருப்பி அனுப்பினர்.

இதுகுறித்து அவரது கணவர் பீட்டர் கார்னிக்கி கூறுகையில், ‘எவ்வித காரணமும் தெரிவிக்கப்படாமல் ஓர்சினி திருப்பி அனுப்பப்பட்டார்’ என்று கூறியுள்ளார். இந்தச் சம்பவத்திற்குக் கல்வியாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் மத்தியில் கடும் கண்டனம் எழுந்துள்ளது. இதுகுறித்து வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா கருத்து தெரிவிக்கையில், ‘ஒன்றிய அரசின் செயல் பாதுகாப்பற்ற, தேவையற்ற அச்சம் கொண்டதாகவும், முட்டாள்தனமானதாகவும் உள்ளது’ என்று கடுமையாகச் சாடியுள்ளார். இதுகுறித்து ஒன்றிய அரசு வட்டாரங்கள் கூறுகையில், ‘பேராசிரியரான பிரான்செஸ்கா ஓர்சினி, கடந்த மார்ச் மாதத்திலேயே ஒன்றிய அரசின் கரும்புள்ளிப் பட்டியலில் சேர்க்கப்பட்டார்; அவரது முந்தைய இந்திய பயணங்களின் போது, முறையான ‘ஆர்’ விசா பெறாமல் ஆய்வுக் கட்டுரைகளில் ஈடுபட்டார். சுற்றுலா விசாவில் வந்துவிட்டு, அந்த விசாவை பயன்படுத்தி விசா விதிகளை மீறினார்’ என்றன.