ஹிஜாவு நிதி நிறுவனத்தில் ரூ.4620 கோடி மோசடி; 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை: சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிய ஹிஜாவு நிதி நிறுவனம், மாதம் 15 சதவீதம் வட்டி தருவதாகக் கூறி பொதுமக்களிடம் சுமார் 4620 கோடி ரூபாய் முதலீடுகள் பெற்று மோசடி செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து இதுவரை 14 பேரை கைது செய்துள்ளனர்.
இந்த வழக்கில், நிறுவன இயக்குநர் அலெக்சாண்டர் மற்றும் முகவர்கள் உள்ளிட்ட 15 பேர் தலைமறைவாக உள்ளனர். இவர்களுக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நிர்வாக இயக்குநர் எம்.சவுந்தர ராஜன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் சந்திரசேகரன், ரவிசந்திரன், முரளிதரன், முத்துப் பெருமாள் கலைசெல்வி, முத்துக் குமரன், செல்வம், சுரேஷ் சுஜாதா கந்தா உள்ளிட்ட 9 பேர் ஜாமீன் கோரியும் தலைமறைவாக உள்ள நிர்வாகி ராமராஜ் முன்ஜாமீன் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயசந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில், சுமார் 89 ஆயிரம் முதலீட்டாளர்களிடம் சுமார் 4620 கோடி ரூபாய் முதலீடுகள் பெற்று மோசடி செய்துள்ளனர். 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இதுவரை புகார்கள் அளித்துள்ளனர். 40 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். மனுதாரர்களுக்கு ஜாமீன் வழங்கினால் விசாரணை பாதிக்கப்படும். சாட்சிகளை கலைக்க வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே, இந்த வழக்கில் தொடர்புடைய இருவருக்கு வழங்கிய ஜாமீனை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. மோசடி செய்யப்பட்ட பணத்தில் கால் பங்கு கூட இதுவரை மீட்கவில்லை. முக்கிய குற்றவாளி அலெக்சாண்டர் இன்னும் தலைமறைவாக உள்ளார். பொருளாதார குற்ற வழக்குகளில் தொடர்புடைவர்களுக்கு ஜாமீன் வழங்க கூடாது என்று உச்ச நீதிமன்றம் பல வழக்குகளில் தெரிவித்துள்ளது. எனவே, நீதிமன்றம் ஜாமீன் வழங்க கூடாது என்று வாதிட்டார்.
அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், ஜாமீன் வழங்கினால் நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்க தயாராக உள்ளோம். பல மாதங்களாக சிறையில் உள்ளதால் ஜாமீன் வழங்க வேண்டும் என்று வாதிட்டனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நேற்று தீர்ப்பு அளித்தார். அதில், ஜாமீன் கோரிய சவுந்தரராஜன் உள்ளிட்ட 9 பேரின் ஜாமீன் மனுவையும், முன்ஜாமீன் கோரிய ராமராஜ் மனுவையும் தள்ளுபடி செய்கிறேன். குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்களுடைய சொத்து விவரங்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு பணத்தை திரும்ப அளிப்பது தொடர்பாக எந்தவிதமான உத்தரவாதத்தையும் நீதிமன்றத்தில் அளிக்காததால் தற்போதைக்கு ஜாமீன் வழங்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.