Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

அரசு மருத்துவர்கள் சங்க தலைவரின் பணியிட மாற்றத்திற்கு இடைக்கால தடை: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: மருத்துவமனைகளின் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு மருத்துவர்கள் சங்க தலைவர் பெருமாள் பிள்ளை மேட்டூரில் இருந்து சென்னை நோக்கி கடந்த ஜூன் 11ம் தேதி முதல் 19ம் தேதி வரை பாதயாத்திரை மேற்கொண்டார்.

இந்நிலையில், சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் பணியாற்றி வந்த அவரை, நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. தன்னை பணியிடம் மாற்றம் செய்தது பழிவாங்கும் நடவடிக்கை எனக் கூறி அரசு மருத்துவர்கள் சங்க தலைவர் பெருமாள் பிள்ளை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் பேரணி செல்லும் முன்பு முறையான அனுமதி கடிதம் உயர் அதிகாரிகளுடம் வழங்கியிருந்தேன். அதை கருத்தில் கொள்ளாமல் தன்னை பணியிட மாற்றம் செய்ததை விதிகளுக்கு முரணானது என்று வாதிடப்பட்டது. அரசு தரப்பில், மனுதாரரை திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் குழந்தைகள் மருத்துவத் துறை இணைப் பேராசிரியராக நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி, அரசின் பணியிட மாற்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்த உத்தரவிட்டார். மேலும் வழக்கு தொடர்பாக 2 வாரங்களில் அரசு பதிலளிக்கவும் உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை தள்ளி வைத்தார்.