சென்னை: கடந்த 6 நாட்களாக குறைந்து வந்த நிலையில், நேற்று ஒரே நாளில் தங்கம் விலை காலை, மாலை என இருமுறை உயர்ந்து பவுனுக்கு ரூ.1600 அதிகரித்ததால் நகைப் பிரியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். உலக சந்தை, அமெரிக்க டாலர் மதிப்பு, பங்குச் சந்தை ஏற்ற இறக்கங்கள் போன்ற காரணிகளால் தங்கம் விலை தீர்மானிக்கப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி தங்கம் விலை வரலாறு காணாத விலை உயர்வை சந்தித்துள்ளது. இதனால் திருமண மாதங்களை நோக்கி நெருங்கும் நேரத்தில் நுகர்வோர்களுக்கு சவாலாக மாறியுள்ளது.
தங்கம் விலை கடந்த அக்டோபர் மாதம் 17ம்தேதி கிராம் ரூ.12,200க்கும், ஒரு பவுன் ரூ.97,600க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதுதான் இதுவரை இல்லாத தங்கம் விலை உச்சமாக பார்க்கப்பட்டது. அதன் பின்னர் விலை அதிகரிக்கும் என சொல்லப்பட்ட நிலையில், விலை குறைய தொடங்கியது. ஒரு கட்டத்தில் அதாவது, கடந்த மாதம் 28ம்தேதி பவுன் ரூ.89 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. இதையடுத்து, இந்த மாத தொடக்கத்தில் இருந்து தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. அதிகபட்சமாக நவம்பர் 13ம்தேதி ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.11,900 என்ற இந்த மாதத்திற்கான உச்சத்தை எட்டியது.
ஒரு பவுன் தங்கம் ரூ.95,200 என ஆனது. இதையடுத்து, தங்கத்தின் விலை மீண்டும் ஒரு லட்சத்தை நெருங்கி விட்டது என சாமானிய மக்கள் கலக்கமடைந்தனர். இந்த நிலையில் தங்கத்தின் விலை சரிவடைய தொடங்கியது. நவம்பர் 17ம்தேதி திங்கட்கிழமை கிராமுக்கு ரூ.10 குறைந்து சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூ.11,540க்கு விற்பனை செய்யப்பட்டது. செவ்வாய்க்கிழமையான நேற்று முன்தினம் கிராமுக்கு ரூ.140 என தடாலடியாக குறைந்து ரூ.11,400க்கு விற்பனை செய்யப்பட்டது. இப்படி கடந்த 6 நாட்களாக சரிந்து வந்த நிலையில் நேற்று திடீரென உயர்ந்துள்ளது.
கடந்த 6 நாட்களில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.4,500 குறைந்தது குறிப்பிடத்தக்கது. இந்த விலை குறைவு நீடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று காலை திடீரென தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதாவது, தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து, ஒரு கிராம் ரூ.11,540க்கும், பவுனுக்கு ரூ.80 குறைந்து, ஒரு பவுன் ரூ.92,320க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் தங்கத்தின் விலை நேற்று 2வது முறையாக மீண்டும் உயர்ந்து அதிரடி காட்டியது.
நேற்று காலை பவுனுக்கு ரூ.800 கூடிய நிலையில், மதியம் மேலும் ரூ.800 கூடியது. தங்கம் விலை பவுனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.92,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.11,600க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று ஒரே நாளில் மட்டும் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.1600 உயர்ந்து வாடிக்கையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. இதனால் கலக்கமடைந்த நகைப் பிரியர்கள் தங்கத்தை இனி கனவில் தான் வாங்க முடியுமோ என அதிர்ச்சியடைந்துள்ளனர்.


