சென்னை: சென்னையை சேர்ந்த டாக்டர் தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாரத்து வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து வரும் சென்னை குடும்ப நல நீதிமன்றம், டாக்டர் தனது மனைவிக்கு மாதம் ரூ.30 ஆயிரம் ஜீவனாம்சம் வழங்குமாறு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து டாக்டர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி பி.பி.பாலாஜி முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரர் தனது மனைவி மற்றும் மகனுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் ஜீவனாம்சம் தர வேண்டும் என்று குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மனுதாரரின் மகன் நீட் தேர்வுக்காக படித்துக் கொண்டிருக்கிறார். அவரது படிப்புக்கான செலவாக ரூ.2.77 லட்சத்தையும், ஜீவனாம்ச தொகையையும் தருவதற்கு மனுதாரர் சம்மதித்துள்ளார்.
அதே நேரத்தில், மனைவிக்கு அதிக அளவில் அசையா சொத்துகளும், வருமானமும் உள்ளது. அவர் ஒரு ஸ்கேன் சென்டரை நடத்தி வருகிறார் என்று மனுதாரர் தரப்பில் வாதிட்டு அது தொடர்பான சான்றுகளும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே, மனுதாரர் தனது மனைவிக்கு ஜீவனாம்சம் தர தேவையில்லை. அதே நேரத்தில் மகனுக்கு ஜீவனாம்சம் தரும் உத்தரவில் இந்த நீதிமன்றம் தலையிடவில்லை என்று உத்தரவிட்டார்.