Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

டெல்டாவில் 3வது நாளாக பலத்த மழை; புளியஞ்சோலை, நந்தியாற்றில் வெள்ளப்பெருக்கு 100 ஏக்கர் விளை நிலத்தில் தண்ணீர் சூழ்ந்தது: வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தி பாதிப்பு

திருச்சி: டெல்டா மாவட்டங்களில் 3வது நாளாக நேற்றிரவும் பலத்த மழை கொட்டியது. இதனால் புளியஞ்சோலை, நந்தியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்களில் 3வது நாளாக நேற்றிரவும் மழை வெளுத்து வாங்கியது.

தஞ்சை மாவட்டத்தில் சுமார் 1.30 மணி நேரம், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் 1 மணி நேரம் நேற்றிரவு இடி, மின்னலுடன் பலத்த மழை கொட்டியது. அதேபோல் புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், கரூர், திருச்சி மாவட்டங்களிலும் சுமார் 1 மணி நேரம் மிதமான மழை பொழிந்தது. மழை காரணமாக வேதாரண்யம் அகஸ்தியன்பள்ளி, கடிநல்வயல் உள்ளிட்ட பகுதிகளில் 9000 ஏக்கரில் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஒரு வாரமாக தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். அதேபோல் டெல்டாவில் குறுவை அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகே ஊட்டத்தூரில் நந்தியாறு துவங்குகிறது. மழை காலங்களில் வெள்ளம் நந்தியாறு வழியாக திருச்சி மாவட்டம் நம்புகுறிச்சி, கொளக்குடி, காணக்கிளியநல்லூர், வந்தலைக்கூடலூர், சந்கேந்தி, இருதயபுரம், செம்பரை, மாங்குடி, நத்தம் பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் கலக்கும் வகையில் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவிலிருந்து நந்தியாற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இதனால் செம்பரையில் 50 ஏக்கர் பருத்தி, மக்காச்சோளம் வயலில் தண்ணீர் சூழ்ந்தது.

மேலும் 50 ஏக்கரில் நடவு செய்து 2 மாதமான குறுவை வயலிலும் தண்ணீர் தேங்கியுள்ளது. அதேபோல் புஞ்சை சங்கேந்தி - புள்ளம்பாடி சாலையை மூழ்கடித்தபடி தண்ணீர் செல்கிறது.இதேபோல் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பகுதியில் பெய்த மழையால் திருச்சி மாவட்டம் துறையூர் அருகே புளியஞ்சோலை ஆற்றில் செந்நீர் நிறத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இங்கிருந்து அய்யாறு, ஜம்பேரிக்கு தண்ணீர் செல்கிறது. இதனால் விவசாயிகள், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்று காலை நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு(மி.மீ): திருவாரூர் 56, நன்னிலம் 36, குடவாசல் 35, வலங்கைமான் 17, நீடாமங்கலம் 24, பாண்டவையாறு தலைப்பு 9, திருத்துறைப்பூண்டி 4.