Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழ்நாட்டின் மலைப்பகுதி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் தமிழ்நாடு மற்றும் அதை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதுதவிர கேரள பருவமழையால் தென்மேற்கு அரபிக் கடல் பகுதியில் காற்றழுத்தம் உருவாகியுள்ளது. மேலும் தென்மேற்கு பகுதியில் இருந்து வீசும் காற்றின் வேகம் மாறியுள்ளதால் தமிழ்நாட்டின் குமரிக்கடல் பகுதியிலும் மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. அதன் காரணமாக தென் மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்து வருகிறது.

இதற்கிடையே மதுரை விமான நிலையத்தில் 102 டிகிரி வெயில் நிலவியது. வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளிப் பகுதிகளில் 100 டிகிரியும், தென் தமிழக உள் மாவட்டங்களில் 101 டிகிரியும், வட தமிழக கடலோர மாவட்டங்களில் 100 டிகிரியும் வெயில் பதிவாகியுள்ளது. இந்நிலையில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது.

இதே நிலை 29ம் தேதி வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெப்பநிலையைப் பொருத்தவரையில் 27ம் தேதிவரை தமிழ்நாடு மற்றும் புதுவையில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை ஒட்டியும், ஓரிரு இடங்களில் 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியசுக்கும் அதிகமாக இருக்கும். சென்னையில் ஓரளவு மேகமூட்டம் காணப்படும்.