மேற்கு வங்கத்தில் பலத்த மழை; நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பரிதாப பலி: சிக்கிம் சாலை துண்டிக்கப்பட்டதால் அவதி
டார்ஜிலிங்: மேற்குவங்கத்தின் டார்ஜிலிங் மாவட்டத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி 14 பேர் உயிரிழந்த நிலையில், சிக்கிம் மாநிலத்துடனான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் தற்போது பெய்துவரும் கனமழையால் டார்ஜிலிங் மாவட்டம் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளது. கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகளால் குர்சியோங் உள்ளிட்ட பகுதிகளில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. ஒரு பாலம் இடிந்து விழுந்ததில் மட்டும் ஆறு பேர் உயிரிழந்ததாக முதலில் கூறப்பட்டது.
சிக்கிம் மாநிலத்திற்கான முக்கிய சாலை இணைப்பான தேசிய நெடுஞ்சாலை 10, மண் சரிவுகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், சிக்கிம் மாநிலம் மற்ற பகுதிகளில் இருந்து சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மற்றும் அவசரகாலக் குழுக்கள் மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே, இந்திய வானிலை ஆய்வு மையம் இப்பகுதிக்கு ‘ஆரஞ்சு எச்சரிக்கை’ விடுத்து, கனமழை தொடரும் என எச்சரித்துள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. ஏற்பட்ட இந்த கோர சம்பவத்தில், ஆரம்பகட்ட தகவல்களின்படி குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் பலரைக் காணவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இமயமலைப் பகுதியில் அமைந்துள்ள டார்ஜிலிங் மாவட்டம், நிலச்சரிவு அபாயம் மிகுந்த பகுதியாகக் கருதப்படுகிறது. கடந்த 2023ல் சிக்கிமில் ஏற்பட்ட தீஸ்தா நதிப் பெருவெள்ளப் பேரழிவு, மழையால் ஏற்படும் பாதிப்பை தொடர்ந்து நினைவூட்டி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.