பிரேசில் மாடல் புகைப்படத்துடன் பல பெயர்களில் 22 வாக்குகள்.. ஹரியானாவில் வாக்குத் திருட்டை அம்பலப்படுத்திய ராகுல் காந்தி!!
டெல்லி: ஹரியானாவில் காங்கிரஸ் கட்சி மாபெரும் வெற்றி பெறுவதை தடுத்து, தோற்கடிக்க சதி நடந்துள்ளது என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். வாக்குத் திருட்டு தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியதாவது; பல கருத்துகணிப்புகள் காங்கிரஸ் வெற்றி பெறும் என கூறியிருந்தன. ஆனால் முடிவு வேறாக இருந்தது. மோசடிகள் நடக்காமல் இருந்திருந்தால் ஹரியானா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கும். வரலாற்றில் முதல்முறையாக தபால் வாக்குகளுக்கும், EVM வாக்குகளுக்கும் தொடர்பே இல்லாமல் இருந்தது. வாக்கு மோசடி முடிவுகளை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். ஆட்சியையே எப்படி திருடியுள்ளார்கள் என்பதை புள்ளி விவரங்கள் மூலம் அம்பலப்படுத்தப் போகிறேன்.
ஆபரேஷன் ஆட்சி திருட்டு என்ற பெயரில் பாஜக, காங்கிரஸின் பிரமாண்ட வெற்றியை தோல்வியாக மாற்றியது. காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என்று அனைத்து தரப்பும் கூறியபோது பாஜவைச் சேர்ந்த நயாப் சைனி மட்டும் வஞ்சக சிரிப்பு சிரித்தார். எங்களிடம் ஒரு ட்ரிக் இருக்கிறது என்று நயாப் சைனி கூறினார். ஹரியானா பாஜக முதல்வர் நயாப் சிங் சைனி பேட்டியை மேற்கோள்காட்டி பாஜக சதியை அம்பலப்படுத்தினார். ஹரியானாவில் வெறும் 22,000 வாக்குகளில் தான் காங்கிரஸ் வெற்றி வாய்ப்பை இழந்தது. ஹரியானாவில் ராய் சட்டமன்ற தொகுதியில் 10 வாக்குச்சாவடிகளில் 22 முறை ஒரே நபர் ஓட்டளித்துள்ளார்.
ஹரியானாவில் 22 முறை வாக்களித்த வாக்காளரின் புகைப்படம் பிரேசிலைச் சேர்ந்த மாடல் ஒருவருடையது. ஹரியானாவில் மொத்த வாக்காளர்கள் 2 கோடி பேர், திருடப்பட்ட வாக்குகள் எண்ணிக்கை 25 லட்சம். ஹரியானாவில் மொத்தம் உள்ள வாக்குகளில் 12.5 சதவீதம் வாக்குகள் திருடப்பட்டுள்ளன. 8ல் ஒரு வாக்கு ஹரியானா சட்டமன்ற தேர்தலில் திருடப்பட்டது. ஹரியானாவில் ஒரே ஒரு புகைப்படத்துடன் ஒரு சட்டமன்ற தொகுதியில் 100 வாக்குகள் இடம்பெற்றுள்ளது. ஹரியானாவில் பெண் புகைப்படத்துடன் கூடிய ஆண் வாக்காளர் வாக்குப் பதிவு செய்தது அம்பலம். மாதவ்புரா, அலந்த் தொகுதிகளில் நடந்தது தனிப்பட்ட சில தொகுதிகளில் நடந்த மோசடி அல்ல என்பது அப்போதே தெரிந்தது. தேசிய மற்றும் மாநில அளவில் நடந்த மோசடியை கண்டுபிடித்துள்ளோம். ம.பி., சத்தீஸ்கர், மராட்டியத்தில் அதே மோசடி நடந்தது தெரிய வந்தது என்றார்.
