சண்டிகர்: அரியானா போலீஸ் கூடுதல் டிஜிபியாக இருந்தவர் புரான்குமார். இவர் கடந்த 7ம் தேதி சண்டிகரில் உள்ள வீட்டில் தனது சர்வீஸ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். புரான்குமாரின் மனைவி அம்னீத் குமார் அரியானா மாநில மூத்த ஐஏஎஸ் அதிகாரியாவார். சம்பவம் நடந்த அன்று மாநில முதல்வர் நயாப் சிங் சைனியுடன் வெளிநாட்டிற்கு அதிகாரப்பூர்வ பயணம் சென்றிருந்தார். இது பற்றி கேள்விப்பட்டதும் அவர் உடனே இந்தியா திரும்பினார். அவர் போலீசில் அளித்த புகாரில், அரியானா அரசு நிர்வாகத்தில் நிலவும் சாதிய ரீதியான பாகுபாடு மற்றும் உயர் அதிகாரிகளின் டார்ச்சரால் தான் புரான் குமார் தற்கொலை செய்து கொண்டார்.
தலித் என்பதால் எனது கணவருக்கு அதிக துன்புறுத்தல்கள் கொடுத்து வந்தனர். குறிப்பாக மாநில டிஜிபி ஷத்ருஜித் கபூர் தான் அதிக துன்புறுத்தல் கொடுத்தார் என குற்றம் சாட்டியிருந்தார். இந்த நிலையில், ஏடிஜிபி புரான் குமார் தற்கொலை பற்றி விசாரிக்க ஐஜி தலைமையில் 6 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவை சண்டிகர் யூனியன் பிரதேச நிர்வாகம் அமைத்துள்ளது. ஐஜி புஷ்பேந்திர குமார் தலைமையிலான குழுவில் சீனியர் எஸ்பி கன்வர்தீப் கவுர், எஸ்பி பிரியங்கா, டிஎஸ்பி சரண்ஜித்சிங் விர்க் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.