Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஒரே நேரத்தில் நடப்பதால் இயந்திரம் தட்டுப்பாடு; திருவாரூரில் இரவில் குறுவை அறுவடை: விவசாயிகள் மும்முரம்

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் ஒரே நேரத்தில் குறுவை அறுவடை நடப்பதால் இயந்திர தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் இரவில் அறுவடை மேற்கொண்டு வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்தில் நடப்பாண்டு 1,93,932 ஏக்கரில் விவசாயிகள் குறுவை சாகுபடி செய்திருந்தனர். இந்த பயிர்களின் அறுவடை இந்த மாதம் முதல் வாரத்தில் துவங்கியது. கடந்த 15ம் தேதி வரை 60 சதவீதத்துக்கும் மேற்பட்ட பயிர்கள் அறுவடை செய்யப்பட்டது. அதன்பின் மழை பெய்ததால் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டன. திருவாரூர் மாவட்டத்தில் 19ம் தேதி முதல் 21ம் தேதி வரை கனமழை கொட்டியது. தொடர்ந்து 3 நாட்கள் பெய்த மழையால் அறுவடைக்கு தயாரான குறுவை நெற்பயிர்களை மழைநீர் சூழ்ந்தது. மேலும் ஏற்கனவே அறுவடை செய்யப்பட்ட நெல் மணிகள் ஈரப்பதம் காரணமாக அரசு கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

22 சதவீதம் வரை ஈரப்பதம் வைத்து கொள்முதல் செய்வதற்கு உரிய அனுமதியை வழங்குமாறு ஒன்றிய அரசுக்கு தமிழக அரசு சார்பில் கடிதம் எழுதப்பட்டது. இதன் எதிரொலியாக கடந்த 26, 27, 28ம் தேதிகளில் ஒன்றிய குழுவினர் டெல்டாவில் உள்ள அரசு கொள்முதல் நிலையங்களில் ஆய்வு செய்து நெல் மாதிரிகளை எடுத்து சென்றனர். இந்நிலையில் கடந்த 3 நாட்களாக திருவாரூர் மாவட்டத்தில் மழை ஓய்ந்து வெயில் அடித்து வருவதால் வயல்களில் சூழ்ந்திருந்த தண்ணீர் வடிந்தது. இதனால் எஞ்சிய குறுவை பயிர்கள் அறுவடை முழுமூச்சில் நடந்து வருகிறது. மேலும் ஒரே நேரத்தில் அறுவடை பணி நடந்து வருவதால் அறுவடை இயந்திரங்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பகல் மட்டுமின்றி இரவு நேரங்களிலும் அறுவடை பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இயந்திரத்தில் உள்ள விளக்குகளை பயன்படுத்தி அறுவடை நடந்து வருகிறது.

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று வரை சாகுபடி செய்யப்பட்ட 1,93,932 ஏக்கரில் 1,83,407 ஏக்கரில் அறுவடை முடிந்துள்ளது. இது மொத்த சாகுபடி பரப்பளவில் 96 சதவீதமாகும். இதனால் 10,500 ஏக்கர் அளவில் மட்டுமே அறுவடை பணி மீதம் உள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.