Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் காசா அமைதி ஒப்பந்த திட்டத்தின், சில அம்சங்களுக்கு ஹமாஸ் அமைப்பு ஒப்புதல்!

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் காசா அமைதி ஒப்பந்த திட்டத்தின், சில அம்சங்களுக்கு ஹமாஸ் அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது. பணயக்கைதிகளை விடுவிக்க ஒப்புக்கொள்வதாக தெரிவித்துள்ள ஹமாஸ் அமைப்பு, ட்ரம்பின் 20 அம்ச திட்டங்கள் குறித்து மேலும் பேச்சுவார்த்தைகளை நடத்த தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது. ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்து வருகிறது. இதில், பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 66 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தலைமையில் மத்தியஸ்தம் செய்யும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்காவுக்கு கடந்த திங்கட்கிழமை சென்றார்.

அவரை வெள்ளை மாளிகையின் வாசலுக்கு வந்து கைகுலுக்கி வரவேற்ற டிரம்ப். நீண்டநேரம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, காசா போரை முடிவுக்கு கொண்டு வர டிரம்ப் சார்பில் தீவிர அழுத்தம் தரப்பட்டது. இதனால் காசா போர் விரைவில் முடிவுக்கு வருவதுடன், போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கான சாத்தியமும் அதிகரித்தது. காசா போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், 20 அம்சங்கள் கொண்ட திட்டத்தினை டிரம்ப் முன்வைத்துள்ளார். இதற்கு நெதன்யாகு சம்மதம் தெரிவித்து உள்ளார் என கூறப்படுகிறது. டிரம்புக்கு எகிப்து, ஜோர்டான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், துருக்கி, இந்தோனேசியா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட 8 முஸ்லிம் நாடுகளும் ஆதரவாக நிற்கின்றன.

இதனிடையே டிரம்ப் அறிவித்த சமரச திட்டத்தை ஏற்க இஸ்ரேல் சம்மதம் தெரிவித்தபோதும், காசா மீதான தாக்குதலை கைவிடவில்லை. டிரம்பின் சமரச திட்டத்தை ஏற்க ஹமாஸ் இயக்கத்தினருக்கும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. அதை பரிசீலிப்பதாக ஹமாஸ் தெரிவித்திருந்தது. இந்த சூழலில் சமரச திட்டத்தை ஏற்று போரை முடிவுக்கு கொண்டுவர டிரம்ப் காலக்கெடுவை நிர்ணயித்தார். அவ்வாறு செய்யாவிட்டால் ஹமாஸ் தாக்குதல்களைச் சந்திக்கும் என்று அச்சுறுத்தினார்.

முன்மொழியப்படட அமைதி ஒப்பந்தத்துக்கு நாளை (05.10.2025) மாலை 6 மணி வரை கெடுவிதித்து அறிவித்திருந்தார். இந்நிலையில், இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிக்க ஹமாஸ் அமைப்பு ஒப்புக்கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது. இதன்படி பணயக்கைதிகளை விடுவிக்க ஒப்புக்கொள்வதாக தெரிவித்துள்ள ஹமாஸ் அமைப்பு, டிரம்பின் 20 அம்ச திட்டங்கள் குறித்து மேலும் பேச்சுவார்த்தைகளை நடத்த தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது.