கிண்டி ரேஸ் கிளப்பில் சுற்றுச்சூழல் பூங்கா... பொதுநலன் சார்ந்த திட்டங்களை அரசு செயல்படுத்தலாம் என ஐகோர்ட் கருத்து!!
சென்னை : சென்னை கிண்டி ரேஸ் கிளப் நிலத்தை அரசு கையகப்படுத்தியதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தனி நீதிபதி விசாரிக்க இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் கிண்டியில் உள்ள ரேஸ் கிளப்பிற்கு குத்தகைக்கு வழங்கப்பட்ட 160 ஏக்கர் நிலத்திற்கு ரூ.730.86 கோடி வாடகை பாக்கியை செலுத்தும் படி சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு இருந்தது. வாடகை பாக்கியை செலுத்த தவறினால், ரேஸ் கோர்ஸ் நிர்வாகத்தை வெளியேற்றி நிலத்தை அரசு கையகப்படுத்தி பொது பயன்பாட்டிற்கு பயன்படுத்தலாம் என்றும் ஐகோர்ட் தெரிவித்திருந்தது.
இதையடுத்து ரேஸ் கிளப் குத்தகையை ரத்து செய்த தமிழ்நாடு அரசு, மீட்கப்பட்ட நிலத்தில் 118 ஏக்கர் பரப்பளவில் தோட்டக்கலைத் துரையின் சார்பில் பொது மக்கள் பயன்பாட்டிற்காக பசுமைவழி பூங்கா மற்றும் மாநகராட்சி சார்பில் மழைநீரை சேமிக்க 4 குளங்கள் என மழைநீர் சேகரிப்பு திட்டத்தையும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசின் திட்டங்களை எதிர்த்து ரேஸ் கிளப் நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த தனி நீதிபதி, தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.
தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு 2 நீதிபதிகள் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், ஆஜராகி வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தனி நீதிபதியின் இடைக்கால உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர். பொதுநலன் சார்ந்த திட்டங்களை அரசு செயல்படுத்தலாம் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
