Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பீகாரில் குஜராத் வாக்காளர் எப்படி?; பாஜகவை கடுமையாக சாடிய தேஜஸ்வி

பாட்னா: குஜராத்தைச் சேர்ந்த பாஜக பொறுப்பாளர் பீகாரில் வாக்காளராக மாறியிருப்பது, தேர்தல் ஆணையத்துடன் இணைந்து அக்கட்சி அரங்கேற்றும் பெரும் மோசடி என தேஜஸ்வி யாதவ் சாடியுள்ளார். பீகார் சட்டப் பேரவை தேர்தல் வரவுள்ளதால், அம்மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த நடவடிக்கையை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இந்த நடைமுறைக்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், பீகார் மாநிலம் பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய பீகார் முன்னாள் துணை முதலமைச்சரும், ராஷ்ட்ரிய ஜனதா தளக் கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவ், ‘பீகார் மாநில பாஜக பொறுப்பாளராக இருக்கும் பிக்குபாய் தல்சானியா என்பவர் குஜராத்தைச் சேர்ந்தவர்.

அவர் தனது கடைசி வாக்கினை கடந்த 2024ம் ஆண்டு தேர்தலின்போது குஜராத்தில்தான் பதிவு செய்தார். அதன்பிறகு குஜராத் வாக்காளர் பட்டியலில் இருந்து தனது பெயரை நீக்கியுள்ளார். தற்போது அவர் பாட்னாவின் வாக்காளராக மாறியிருக்கிறார். ஐந்து ஆண்டுகள் கூட நிறைவடையாத நிலையில், ஒருவர் சட்டவிரோதமாக இடத்தை மாற்றி வாக்களிப்பது எப்படி சாத்தியம்? பீகார் தேர்தல் முடிந்த பிறகு, இங்கிருந்தும் தனது பெயரை நீக்கிக்கொண்டு அவர் எங்குச் செல்வார்? இதன் பின்னணியில் உள்ள சதியை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். தேர்தல் ஆணையத்துடன் கைகோர்த்துக்கொண்டு பாஜக மிகப் பெரிய அளவில் நேர்மையற்ற செயலில் ஈடுபட்டு வருகிறது’ என்று கடுமையாகக் குற்றம் சாட்டினார்.