குஜராத் விமான விபத்தில் உயிரிழந்து துண்டு துண்டாக கரிக்கட்டையாக கிடந்த 229 உடல்களின் போஸ்ட் மார்டம் 13 மணி நேரத்தில் செய்தது எப்படி?
* விஜய் பிரசாரத்தில் பலியான 41 பேர் பிரேத பரிசோதனை ஒப்பிட்டு நெட்டிசன்கள் விமர்சனம்
கரூர்: கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரசாரத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இவர்களின் பிரேத பரிசோதனை குறித்து பல்வேறு சர்ச்சைகள் கிளப்பப்பட்டு வந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தற்போது சமூக வலைதளங்களில் நெட்டிசனகள் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் ஒருவர், மிக தெளிவான விளக்கத்தை அளித்துள்ளார். அதில் அவர் பேசியிருப்பதாவது:
விஜய் பிரசாரத்தில் பலியான 41 பேர் உடல்களை எப்படி 4 மணி நேரத்தில் போஸ்ட் மார்டம் பண்ண முடியும். இது கரூர் பிரச்னையில் திரும்ப திரும்ப எழுப்ப கூடிய மர்மம் நிறைந்த கேள்வியாக உள்ளது. முதலில் 4 மணி நேரத்தில் போஸ்ட் மார்டம் நடக்கவில்லை. 16 மணி நேரம் நடைபெற்றது. இதற்கு ஆதாரங்கள் இருந்தாலும் திரும்ப திரும்ப இதையே கேள்வியாக எழுப்பி கொண்டிருக்கின்றனர். ஒரு சில மாதங்களுக்கு முன், குஜராத்தில் நடைபெற்ற விமான விபத்தில் எப்படி போஸ்மார்டம் நடைபெற்றது என்பதை பார்க்க வேண்டும்.
விமான விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 229 பேர். அத்தனை பேரின் உடல்களையும் வெறும் 13 மணி நேரத்தில் போஸ்ட் மார்டம் செய்து முடித்தார்கள் அங்குள்ள டாக்டர்கள். இதற்கு அனைத்து தேசிய ஊடகங்கள் மற்றும் வலைதள பதிவுகள் சாட்சியாக உள்ளது. திடீர் என்று விமான விபத்து நடைபெற்ற உடன் சுற்று பகுதியில் உள்ள எல்லா டாக்டர்களையும் அங்கு வரவழைத்து, மொத்தம் 140 டாக்டர்கள் வேக வேகமாக வெறும் 13 மணி நேரத்தில் மொத்த உடல்களும் போஸ்மார்டம் பண்ணி முடிக்கப்பட்டு உடல்கள் ஒப்படைக்கப்பட்டது. கரூரில் நடந்த சம்பவத்தில் முழு உடல்கள் கிடைத்தன.
ஆனால் குஜராத் சம்பவத்தில் உடல்கள் நசுங்கி, சிதைந்து, எரிந்து, உருக்குலைந்த நிலையில்தான் கிடைக்க பெற்றது. வெளிபார்வைக்கு எல்லோரும் நினைப்பது என்னவென்றால் முழு உடலை போஸ்ட் மார்டம் பண்ணுவதற்கு காலதாமதம் ஆகும். குறைந்த உடல்பாகங்களில் சீக்கிரமாக போஸ்ட் மார்டம் செய்து விடலாம் என்று நினைக்கிறோம். அப்படி கிடையாது. முழு உடல்களை போஸ்ட் மார்டம் செய்வதை விட, சிதைந்து போன உடல்களை போஸ்ட் மார்டம் செய்வதற்கு அதிக நேரம் எடுக்கும் என்று டாக்டர்கள் கூறுகின்றனர்.
குஜராத் சம்பவத்தில் உடல்கள் அடையாளம் காண முடியாத அளவிற்கு இருந்ததால் கூடுதலாக டிஎன்ஏ பரிசோதனையெல்லாம் செய்ய வேண்டி இருக்கும். கூடுதல் நேரம் எடுத்துக்கொள்ள வேண்டிய உடல்களையே டாக்டர்களை ஒன்று திரட்டி 13 மணி நேரத்தில் போஸ்ட்மார்டம் செய்து முடித்திருக்கிறார்கள். இது குறித்து மேலும் அறிந்து கொள்வதற்கு குஜராத், தமிழ்நாடு ஆகிய இரண்டு மாநிலங்களின் மருத்துவ கட்டமைப்பு எவ்வாறு இருக்கிறது என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். தமிழகம் மருத்துவ துறையில் மிகவும் முன்னேறிய மாநிலம் என்பதை நாம் எல்லோரும் அறிவோம்.
தமிழ்நாட்டில் 250 பேருக்கு ஒரு டாக்டர் உள்ளார். குஜராத்தில் 1,400 பேருக்கு ஒரு டாக்டர் உள்ளார். தமிழ்நாட்டில் 2 வருடத்திற்கு முந்தைய கணக்கெடுப்பின் படி, 1.30 லட்சம் டாக்டர்கள் உள்ளனர். தமிழ்நாட்டை விட பல மடங்கு மருத்துவ கட்டமைப்பில் பின்தங்கி உள்ள குஜராத்திலேயே, விபத்து காலங்களில் வேகவேகமாக டாக்டர்களை திரட்டி போஸ்ட்மார்டம் நடத்தி முடித்திருக்கிறார்கள். ஏன் தமிழ்நாட்டில் நடத்தி முடிக்க முடியாது.
பொதுவாக நெரிசல் மரணங்கள் எங்கெல்லாம் நடக்கிறதோ? அங்கிருக்கும் மக்களின் மனதை ஆற்றுப்படுத்துவதற்காக, புதுக்கோபம் உண்டாகி விடக்கூடாது என்பதற்காக, அவர்களை மேலும் போஸ்ட்மார்டம் என்ற பெயரில் தாமதப்படுத்தி துக்கப்படுத்தி விடக்கூடாது என்பதற்காக, உடனடியாக போஸ்ட்மார்டம் செய்து உடல்களை ஒப்படைப்பார்கள். கும்பல் மரணங்கள் எங்கெல்லாம் நடக்கிறதோ? அங்கெல்லாம் இந்த நடைமுறை பின்பற்றப்படும். இதைத்தான் குஜராத்திலும் செய்திருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் கரூரிலும் செய்திருக்கிறார்கள். மருத்துவ கட்டமைப்பில் மிகவும் பின்தங்கி உள்ள குஜராத்திலேயே இது சாத்தியம் என்றால், தமிழ்நாட்டில் ஏன் சாத்தியப்படாது? இது ஒரு அடிப்படையான உண்மை. குஜராத் மற்றும் தமிழ்நாடு கரூரில் நடைபெற்ற போஸ்ட்மார்டம் குறித்து ஒப்பிட்டு பார்த்து அரசியல் சர்ச்சைகளை எழுப்புபவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெள்ளத்தெளிவாக விளக்கமளித்துள்ளார்.
* கரூருக்கு 220 டாக்டர்கள் உடனடியாக வந்தது எப்படி?
விஜய் பிரசாரத்தில் உயிரிழந்த 41 பேரின் உடல்களும் இரவோடு இரவாக அடையாளம் காணப்பட்டது. சேலத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தலைமையில் நடந்த பொது சுகாதார மாநாட்டில் கலந்து கொண்ட டாக்டர்கள் அனைவரும் இந்த சம்வம் குறித்து கேள்விப்பட்டு கரூருக்கு விரைந்து வந்தனர். இதே போல் கரூர் சுற்றுப்பகுதியில் உள்ள மாவட்டங்களில் இருந்து 114 டாக்டர்கள், 23 ஸ்பெஷல் நர்ஸ்கள், 16 தடயவியல் நிபுணர்கள் கரூர் அரசு மருத்துவமனைக்கு இரவோடு இரவாக வரவழைக்கப்பட்டனர்.
மேலும், தமிழக அரசின் உத்தரவின் பேரில் திருச்சி, திண்டுக்கல் மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் டாக்டர்கள் கரூருக்கு விரைந்து வந்தனர். இவர்களுடன் சேர்ந்து கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள 220 டாக்டர்கள், 165 நர்ஸ்கள் அனைவரும், உயிருக்கு போராடியவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்ததால் மேலும் உயிரிழப்புகள் ஏற்படாத அளவுக்கு தடுக்கப்பட்டது. இதே போல் உயிரிழந்தவர்களின் 41 பேரின் உடல்களின் போஸ்ட் மார்டமும் துரித கதியில் செய்யப்பட்டு உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.