Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஜி.எஸ்.டி. சீர்திருத்தம்; மக்கள் மீதான வரிச்சுமை குறைந்துள்ளது: ஓன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு

சென்னை: ஜி.எஸ்.டி. சீர்திருத்தத்தின் மூலம் மக்கள் மீதான வரிச்சுமை குறைந்துள்ளது என்று நிர்மலா சீதாராமன் கூறினார். இந்தியா முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பை உறுதி செய்யும் ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1ம்தேதி அமலுக்கு வந்தது. கலால் வரி, வாட், சேவை வரி போன்ற பல்வேறு மறைமுக வரிகள் ஒருங்கிணைக்கப்பட்டு ஜி.எஸ்.டி. என்ற ஒரே குடையின் கீழ் கொண்டுவரப்பட்டன. இந்த ஜி.எஸ்.டி. 4 அடுக்குகளை கொண்டிருந்தது. அதன்படி 5, 12, 18 மற்றும் 28 சதவீதம் என 4 வகையான வரி விகிதத்தின் கீழ் அனைத்துப்பொருட்கள் மற்றும் சேவைகள் ஒருங்கிணைக்கப்பட்டன. ஜி.எஸ்.டி. அமலுக்கு வந்து 8 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் இந்த ஜி.எஸ்.டி. விகிதங்களை குறைக்க மத்திய அரசு முடிவு செய்தது.

இதன்படி 4 அடுக்கு ஜி.எஸ்.டி. 2 அடுக்காக குறைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. வெறும் 5 மற்றும் 18 சதவீத அடுக்குகளை மட்டுமே கொண்டிருக்கும் வகையில் வரி விகிதம் மாற்றப்பட்டுள்ளது. அதேநேரம் சிகரெட் மற்றும் புகையிலை, பான் மசாலா போன்ற பாவப்பொருட்கள் மற்றும் சொகுசு கார் போன்ற உயர் ரக ஆடம்பர பொருட்கள், குளிர் பானங்கள் ஆகியவற்றுக்காக 40 சதவீத சிறப்பு வரி அடுக்கும் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த வரி குறைப்பு மூலம் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் விலை கணிசமாக குறையும் நிலை ஏற்பட்டு இருக்கிறது.இந்த ஜி.எஸ்.டி. குறைப்பு வருகிற 22-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்த நிலையில், ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் மக்கள் மீதான வரிச்சுமையை குறைந்துள்ளது என மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: முன்பு 4 வகைகளாக இருந்த ஜி.எஸ்.டி. வரி இப்போது 5 மற்றும் 18 சதவீதம் என்ற அளவில் குறைக்கப்பட்டுள்ளது. இந்த ஜி.எஸ்.டி. வரி குறைப்பு இந்தியாவின் 140 கோடி மக்கள் மீதும் நல்ல விதமான தாக்கத்தை ஏற்படுத்தும். முன்பு 12 சதவிதமாகவும், 18 சதவீதமாகவும் இருந்த பொருட்களின் வரி, தற்போது 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் சில பொருட்களின் வரி பூஜ்ஜியத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, முற்றிலுமாக வரி நீக்கப்பட்டுள்ளது.

இந்த ஜி.எஸ்.டி. வரி சீர்திருத்தம் தீபாவளிக்கு முன்பாக அமல்படுத்தப்படும் என்று செங்கோட்டையில் சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடி தெரிவித்தார். தென்மாநிலங்களில் நாம் தீபாவளிக்கு முன்பாக புதிய துணிகள் உள்ளிட்ட பொருட்களை வாங்குவோம். ஆனால் வட மாநிலங்களில் நவராத்திரி, துர்கா பூஜையை முன்னிட்டு வீட்டிற்கு நிறைய பொருட்கள் வாங்குவார்கள். எனவே, அனைத்து மாநில பிரதிநிதிகளும் இருக்கக் கூடிய ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில், அனைத்து மாநிலங்களின் பண்டிகைகளையும் மனதில் வைத்துக் கொண்டு முன்கூட்டியே ஜி.எஸ்.டி. வரி சீர்திருத்தத்தை அறிவித்துவிட்டோம். இது இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனுக்கும் கிடைத்த வெற்றி. இவ்வாறு அவர் பேசினார்.

காகிதத்துக்கு 2 விதமான ஜிஎஸ்டி விதிப்பது ஏன்? நிர்மலா சீதாராமனிடம் கேள்வி

சென்னையில் நடைபெற்ற ஜிஎஸ்டி வரி திருத்தம் தொடர்பான நிகழ்ச்சியில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டனார். அந்த நிகழ்ச்சியில் இந்துஸ்தான் சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் சனத் குமார் பேசுகையில், ‘‘பாடப்புத்தகம், நோட்டு புத்தகம் தயாரிக்கும் காகிதத்துக்கு(பேப்பர்) முற்றிலும் வரி விலக்கு அளிக்கப்படுகிறது. இதனை வரவேற்கிறோம். ஆனால் டைரி, காலண்டர் தயாரிக்க பயன்படுத்தப்படும் அதே காகிதத்துக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படுகிறது. ஒரே காகித்துக்கு 2 விதமான ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுவதால் காகித தொழில்துறையினருக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரே வகை காகிதத்துக்கு 2 விதமான ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுவதை எப்படி கண்காணிக்க முடியும். காகிதத்துக்கு 2 விதமான ஜிஎஸ்டி வரி விதிப்பது ஏன். சிறு, குறு தொழில்துறையில் குறிப்பிட்ட சில தயாரிப்புகளுக்கு மட்டும் ஜிஎஸ்டி வரிச்சலுகை அளிக்கப்பட்டுள்ளது”என்றார்.