Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

8 ஆண்டுகளில் ரூ.55 லட்சம் கோடி வசூல்; ஜி.எஸ்.டி சீர்திருத்தங்கள் வெறும் கண்துடைப்பு: தன்னிச்சையாக பெருமை தேடும் மோடி என விமர்சனம்

புதுடெல்லி: புதிய ஜி.எஸ்.டி. சீர்திருத்தங்கள் குறித்து பிரதமர் மோடி அறிவித்த நிலையில், அவர் தன்னிச்சையாக பெருமை தேடுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு முறையைக் கொண்டு வரும் நோக்கில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) கடந்த 2017ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் பல்வேறு வரி விகிதங்கள் இருப்பதால், அதை எளிமைப்படுத்த வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இந்நிலையில், பிரதமர் மோடி நேற்று புதிய ஜி.எஸ்.டி. சீர்திருத்தங்களை அறிவித்தார்.

புதிய நடைமுறையானது, வரி விதிப்பு முறையை எளிதாக்கும் என்றும், நுகர்வோருக்குப் பயனளிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த அறிவிப்புக்கு ஆம் ஆத்மி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதுகுறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், ‘ஜி.எஸ்.டி. கவுன்சில் என்பது மாநிலங்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஒரு அரசியலமைப்பு அமைப்பு. அங்கு எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு பிரதமர் மோடி தன்னிச்சையாக பெருமை தேடுகிறார்’ என்று குற்றம் சாட்டியுள்ளார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ‘பொதுமக்களுக்கு ஆழமான காயங்களை ஏற்படுத்திவிட்டு, தற்போது ஒன்றிய அரசு சாதாரண கட்டு போடுகிறது. இந்த ‘கப்பார் சிங் வரி’ மூலம் கடந்த எட்டு ஆண்டுகளில் அரசு 55 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது’ எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

மேலும், இந்தச் சீர்திருத்தங்கள் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு கொண்டு வரப்பட்டிருப்பதையும் எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன. இந்தச் சீர்திருத்தங்கள் ஜவுளி, சுற்றுலா, கைவினைப் பொருட்கள் மற்றும் விவசாய இடுபொருட்கள் போன்ற துறைகளின் கவலைகளைப் போக்கத் தவறிவிட்டதாகவும், மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி. இழப்பீட்டை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஒன்றிய அரசு கண்டுகொள்ளவில்லை என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. ஆனால், எதிர்க்கட்சிகளின் இந்தக் குற்றச்சாட்டுகளை ஒன்றிய அரசு மறுத்துள்ளது.

இதுகுறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், ‘அனைத்து மாநிலங்களையும் கலந்தாலோசித்தே, மக்கள் நலன் சார்ந்த சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன’ என்று விளக்கம் அளித்துள்ளார். பிரதமர் மோடியும் தனது உரையில், மாநில அரசுகளின் ஒத்துழைப்பால்தான் இந்த வரி சீர்திருத்தம் சாத்தியமானது என்று குறிப்பிட்டிருந்தார். இந்த புதிய இரு அடுக்கு வரி முறை (5% மற்றும் 18%) வரிவிதிப்பை எளிதாக்கி, நுகர்வோரின் செலவுகளைக் குறைக்கும் என ஒன்றிய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.