Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஜிஎஸ்டி வரி மூலமாக மக்களுக்கும் மாநில அரசுகளுக்கும் பயன் கிடைத்திருக்கிறது: ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு

சென்னை: ஜிஎஸ்டி வரி மூலமாக மக்களுக்கும் மாநில அரசுகளுக்கும் பயன் கிடைத்திருக்கிறது என ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். ஜிஎஸ்டி வரி சீரமைப்பு பற்றி வணிக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் கூட்டு கலந்துரையாடல் நிகழ்ச்சி உயரும் பாரதத்திற்கான வரி சீர்திருத்தங்கள் என்ற தலைப்பில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மியூசிக் அகாடமியில் நேற்று நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

ஜிஎஸ்டி சீர்திருத்தம் நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகன்களுக்கும் கிடைத்திருக்கும் வெற்றியாகும். ஜி.எஸ்.டி. அறிமுகம் செய்யப்பட்டபோது 65 லட்சம் பேர் தான் ஜி.எஸ்.டி. வரி கட்டிக் கொண்டு இருந்தார்கள். ஆனால் ஜி.எஸ்.டி. கொண்டு வந்த 8 ஆண்டுகளில் வரிசெலுத்துவோரின் எண்ணிக்கை 1½ கோடியாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி. அறிமுகம் செய்யப்பட்டபோது ரூ.7.9 லட்சம் கோடியாக இருந்த மொத்த வரியானது இப்போது ரூ.22 லட்சம் கோடிக்கு மேல் சென்றுள்ளது.

ஒரு மாதம் 1.9 அல்லது 2 லட்சம் கோடி ரூபாய் மத்திய, மாநில அரசுகளுக்கு வருமானமாக கிடைக்கிறது. அதை மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் 50 சதவீதமாக பிரித்துக் கொள்கிறோம். அதிலும் மத்திய அரசுக்கு கிடைக்கும் வருவாயில் 23 சதவீதம் மட்டும்தான் மத்திய அரசு எடுத்துக் கொள்கிறது. மீதியெல்லாம் மாநில அரசுகளுக்கு சென்றுவிடுகிறது.

எனவே, ஜி.எஸ்.டி. வரி மூலமாக மக்களுக்கும் பயன் கிடைத்திருக்கிறது. மாநில அரசுகளுக்கும் பயன் கிடைத்திருக்கிறது. மாநிலங்களில் இருந்து வந்த அனைத்து நிதி அமைச்சர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஜிஎஸ்டி வரி சீர்திருத்தத்தில் 350-க்கு மேற்பட்ட பொருட்களுக்கு வரிக் குறைக்கப்பட்டுள்ளது.

* காகிதத்துக்கு 2 விதமான ஜிஎஸ்டி ஏன்?

சென்னையில் நடந்த ஜிஎஸ்டி வரி திருத்தம் தொடர்பான நிகழ்ச்சியில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டனார். அதில் இந்துஸ்தான் சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் சனத் குமார் பேசுகையில், “பாடப்புத்தகம், நோட்டு புத்தகம் தயாரிக்கும் காகிதத்துக்கு (பேப்பர்) முற்றிலும் வரி விலக்கு அளிக்கப்படுகிறது. இதனை வரவேற்கிறோம். ஆனால் டைரி, காலண்டர் தயாரிக்க பயன்படுத்தப்படும் அதே காகிதத்துக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படுகிறது.

ஒரே காகித்துக்கு 2 விதமான ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுவதால் காகித தொழில்துறையினருக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரே வகை காகிதத்துக்கு 2 விதமான ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுவதை எப்படி கண்காணிக்க முடியும். காகிதத்துக்கு 2 விதமான ஜிஎஸ்டி வரி விதிப்பது ஏன். சிறு, குறு தொழில்துறையில் குறிப்பிட்ட சில தயாரிப்புகளுக்கு மட்டும் ஜிஎஸ்டி வரிச்சலுகை அளிக்கப்பட்டுள்ளது”என்றார்.

* ஊறுகாய்தான் போட தெரியும் என்று விமர்சித்தார்கள்

நிர்மலா சீதாராமன் பேசுகையில், ”ஜிஎஸ்டியில் ஏதாவது குறை இருப்பதாக மக்கள் சொன்னால், மோடி ஏன் இப்படி செய்கிறார். நிர்மலா சீதாராமன் என்ன செய்கிறார், அவருக்கு ஊறுகாய்தான் போட தெரியும். ஜிஎஸ்டியை நடத்த தெரியாது என்று விமர்சனம் செய்தார்கள். அதை நாங்கள் பொறுமையாக காதில் கேட்டுக் கொண்டிருந்தோம்.

ஆனால் இவ்வளவு நாளில் மாநில அரசுகளுக்கு பலவிதமான நல்லது நடந்திருக்கிறது. மாநில அரசுக்கு எவ்வளவு வருமானம் பெருகி இருக்கிறது என்பதையும் எடுத்து சொன்னேன். அந்த நல்லதுக்கு, ஊறுகாய் போடுகிற நிர்மலா மாமிதான் காரணம் என்று யாரும் சொல்லவில்லை’’ என்றார்.