Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆங்கில எழுத்து ‘பி’-ஐ சுட்டிக்காட்டி பீடிக்கு ஜிஎஸ்டி வரி குறைப்பு... பீகாரை வம்புக்கு இழுத்த காங்கிரஸ்: சர்ச்சை பதிவால் அரசியல் பரபரப்பு

புதுடெல்லி: பீடி மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பைக் குறிப்பிட்டு, பீகார் மாநிலத்தை இழிவுபடுத்தும் வகையில் காங்கிரஸ் கட்சி வெளியிட்ட சமூக ஊடகப் பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் நடந்த சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கூட்டத்தில், பீடி மீதான ஜிஎஸ்டி வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. மேலும், பீடி சுற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் டெண்டு இலைகள் மீதான வரியும் 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. இந்த வரி குறைப்பு நடவடிக்கை, பீடி தொழிலாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த வரி குறைப்பைத் தொடர்ந்து, கேரள மாநில காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஆங்கில எழுத்தான ‘பி’ என்ற எழுத்தில் பீடியும், பீகாரும் தொடங்குகின்றன; இனி அவற்றை பாவம் என்று கருத முடியாது’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

பீகார் மாநிலத்தை புகையிலைப் பொருளான பீடியுடன் ஒப்பிட்டு இழிவுபடுத்தும் வகையில் இருந்த இந்தப் பதிவு, தேசிய அளவில் பெரும் புயலைக் கிளப்பியது. கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து, அந்தப் பதிவு உடனடியாக நீக்கப்பட்டது. இருப்பினும், இந்தப் பதிவு தொடர்பான விவகாரம் இந்திய அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கேரள காங்கிரசின் இந்தப் பதிவுக்கு பீகார் துணை முதலமைச்சரும், பாஜக தலைவருமான சாம்ராட் சவுத்ரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், ‘பிரதமர் மோடியின் தாயாரை அவமதித்தது, இப்போது பீகார் மாநிலத்தையே அவமதிப்பது என காங்கிரஸின் உண்மையான குணம் வெளிப்பட்டு வருகிறது’ என்று அவர் சாடியுள்ளார். மேலும் ஆளும் ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த சஞ்சய் குமார் ஜா வெளியிட்ட பதிவில், ‘காங்கிரஸின் செயல் வெட்கக்கேடானது.

‘பி’ என்றால் பீடி மட்டுமல்ல, புத்தியும்தான், அது காங்கிரஸிடம் இல்லை. வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் பீகார் மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்’ என்று ஆவேசமாகத் தெரிவித்துள்ளார். மேலும் பாஜக செய்தித் தொடர்பாளர் ஷெசாத் பூனாவாலா கூறுகையில், ‘காங்கிரஸுக்கு ‘சி’, ஊழலுக்கும் ‘சி’’ என்று விமர்சித்துள்ளார். இந்தச் சர்ச்சை குறித்து காங்கிரஸ் தலைமை இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.