ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் மூலம் நடுத்தர மக்களின் சேமிப்பு அதிகரிக்கும்; அனைவரின் இல்லங்களிலும் மகிழ்ச்சி தரும்: ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பதிவு!
டெல்லி: ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விகிதம் 4லிருந்து இரண்டு அடுக்குகளாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பால், முட்டை, தயிர், உப்பு உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்களுக்கும் பனீர், பீஸா, பிரட் ஆகியவற்றுக்கும் வரி விலக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதேபோல 33 உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் தனிநபர் மருத்துவ காப்பீட்டுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு கொடுக்கப்பட்டுள்ளது. ஏசி, டிவி, பாத்திரம் கழுவும் இயந்திரம் உள்ளிட்ட பல பொருட்களின் விலைகள் குறைய உள்ளன.
இந்நிலையில், ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் அனைவரின் இல்லங்களிலும் மகிழ்ச்சி தரும் என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது; அன்றாட அத்தியாவசியப் பொருட்கள், சுகாதாரப் பொருட்கள், மின்னணு சாதனங்கள் மற்றும் கல்விப் பொருட்களின் ஜி.எஸ்.டி. விகிதங்களில் ஏற்பட்டுள்ள முக்கியமான குறைப்பு, நடுத்தர மக்களின் வருமானத்தை அதிகரிக்கும். மேலும், இன்னும் அதிகமாக சேமிக்க அவர்களை ஊக்குவிக்கும். ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் அனைவரின் இல்லங்களிலும் மகிழ்ச்சி தரும்.
ஏழைகள், இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் பெண்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் உறுதிக்கு ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் ஒரு சான்றாகும். புதிய சீர்திருத்தம், பல்வேறு வகையான பொருட்களின் மீதான ஜி.எஸ்.டி. வரியை குறைத்ததுடன், மக்களின் செலவினங்களை மேலும் குறைக்கும். மேலும் உலகின் மிகவும் வளமான நாடாக மாறும் பாதையில் இந்தியா இன்னும் வேகமாக செல்லும். ஏழைகள், விவசாயிகளுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற மோடியின் உறுதிக்கு அடுத்த தலைமுறை ஜி.எஸ்.டி. சீர்திருத்தங்கள் சான்றாகும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.