வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த வாட்டர்பால்ஸ் எஸ்டேட் பகுதியில் வசித்து வருபவர் மாரியப்பன்(27).இவரது மனைவி சுகன்யா(26). தம்பதிக்கு பிரகாஷ்(4) என்ற மகனும்,ஹேமாஸ்ரீ (3) என்ற மகளும் உள்ளனர். இவர்களுடன் மாரியப்பனின் தாய் அசலா(55) என்பவரும் உடன் வசித்து வந்தார். நேற்று அதிகாலை 3.30 மணியளவில்,வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று மாரியப்பனின் வீட்டின் ஜன்னலுக்குள் துதிக்கையை நுழைத்து உணவு தேடியுள்ளது. அதன் பிறகு ஜன்னல் கம்பிகளை வளைத்ததோடு, கதவினை தந்தத்தால் குத்தி உடைக்க முற்பட்டுள்ளது. உடனே அசலா, பேத்தி ஹேமாஸ்ரீ யை கையில் தூக்கிக்கொண்டு, வீட்டை விட்டு வெளியேறி தப்பி ஓட முயன்றார்.
மாரியப்பன் மனைவி சுகன்யா, மகன் பிரகாசுடன் மற்றொரு அறைக்குள் சென்று பதுங்கினார். இந்நிலையில் வெளியே நின்ற யானை அசலா மற்றும் குழந்தை ஹேமாஸ்ரீ யை மூர்க்கத்தனமாக தாக்கியதில் இருவரும் இறந்தனர்.
தகவல் அறிந்த வால்பாறை வனத்துறையினர் வந்து யானையை விரட்டினர். வனத்துறையினர் முதற்கட்ட உதவித்தொகையாக குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சம் வழங்கினர். உடற்கூறாய்வுக்குப்பின் உடல்களை பெற்று திரும்பிய உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் வால்பாறை- கோவை சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். அதிகாரிகள் வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.