சென்னை : தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு: சம்பா பருவத்தில் உளுந்து, பச்சைப்பயறுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. உளுந்து, பச்சைப்பயறு, துவரை உள்ளிட்ட பயறுவகைகளின் சாகுபடியை ஊக்குவித்து உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அறுவடை காலங்களில் ஏற்படும் விலை வீழ்ச்சியினால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிப்படையாமல் இருக்கவும், அவர்களின் நலனை பாதுகாக்கும் வகையில் விலை ஆதரவுத் திட்டத்தின் கீழ் விவசாயிகளிடமிருந்து உளுந்து, பச்சைப்பயறு ஆகியவை குறைந்தபட்ச ஆதரவு விலையில் தமிழக அரசால் நேரடியாக கொள்முதல் செய்யப்படுகிறது.
இதன்படி, 2025-26ம் ஆண்டிற்கான சம்பா பருவத்திற்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி ஒரு கிலோ பச்சை பயறுக்கு ரூ.87.68, ஒரு குவிண்டாலுக்கு ரூ.8,768 குறைந்தபட்ச ஆதரவு விலையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
திருவள்ளூர், விழுப்புரம், திருப்பூர், சேலம், நாமக்கல், விருதுநகர், திண்டுக்கல், நாகப்பட்டினம் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் உள்ள பச்சை பயறு கொள்முதல் செய்யப்பட உள்ளது. உளுந்தை பொறுத்த வரையில் ஒரு கிலோ ரூ.78, ஒரு குவிண்டாலுக்கு ரூ.7,800 குறைந்தபட்ச ஆதரவு விலையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னை, நீலகிரி தவிர்த்து அனைத்து மாவட்டங்களிலும் இது கொள்முதல் செய்யப்பட உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.