Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கேரளா ஆளுநர் வழக்கில் அதிரடி துணைவேந்தரை ஆளுநர்தான் இறுதி செய்ய வேண்டும் என எந்த விதியில் எழுதப்பட்டுள்ளது? ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

புதுடெல்லி: கேரளாவில் உள்ள அப்துல் கலாம் பல்கலைக்கழகத்துக்கு தற்காலிக துணைவேந்தரை நியமித்த கேரள ஆளுநரின் ஆணையை ரத்து செய்த உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஆளுநர் தொடர்ந்த வழக்கு மற்றும் முனைவர் சிவப்பிரசாத் என்பவரை தற்காலிக துணை வேந்தராக மறு நியமனம் செய்து ஆளுநர் பிறப்பித்த அறிவிப்பாணையை எதிர்த்து கேரள அரசு தொடர்ந்த வழக்கு ஆகிய இரண்டும் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜெ.பி.பர்திவாலா மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது கேரளா அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘‘துணைவேந்தரை தேர்வு செய்ய தேடுதல் குழுவை அமைக்கும் அதிகாரம் கேரள அரசுக்கு மட்டுமே உள்ளது. யுஜிசியின் விதிமுறைப்படி கேரளா அரசுக்கு துணைவேந்தர் தேடுதல் குழுவை அமைக்க அதிகாரம் உள்ளது. ஆனால் அதனை மீறி ஆளுநர் தேடுதல் குழுவை அமைத்துள்ளார். இது சட்டத்திற்கு புறம்பானதாகும் என்று தெரிவித்தார்.

இதையடுத்து ஆளுநர் தரப்பில் ஆஜரான ஒன்றிய அரசின் அட்டார்னி ஜெனரல் ஆர்.வெங்கடரமனி, ‘‘இந்த விவகாரத்தில் ஆளுநர் மற்றும் கேரள அரசு இடையே இரண்டு முறை பேச்சு வார்த்தை நடைபெற்றது. இந்த விவகாரத்தில் தற்போது இடைக்காலமாக ஒரு தற்காலிக துணைவேந்தரை நியமனம் செய்யலாம். அதேவேளையில் தங்களுடைய பரிந்துரை இல்லாமல் துணைவேந்தரை தேர்வு செய்ய கூடாது.யுஜிசி விதிமுறையின் படி ஆளுநருக்கே துணைவேந்தரை நியமிப்பதற்கான தேடுதல் குழுவை அமைக்க அதிகாரம் உள்ளது என்று தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதிகள் ஒன்றிய அரசுக்கு சரமாரி கேள்வியெழுப்பினர், ‘‘யுஜிசி விதிமுறைப்படி துணைவேந்தரை தேடும் மூன்று அல்லது ஐந்து பேர் கொண்ட குழு நபர்களின் பெயர்களை பரிந்துரைக்கும் என்று உள்ளது. எந்த இடத்தில் ஆளுநர் தான் இறுதி செய்ய வேண்டும் என்று யுஜிசி விதிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று கேட்டனர். அப்போது குறுக்கிட்ட அட்டார்னி ஜெனரல்,‘‘துணைவேந்தர் நியமன தொடர்பாக பொது அறிவிப்பை வெளியிட்டு அதன் பின்பாக உரிய நபர்கள் அணுகும் போது அதில் தகுதியானவரை பல்கலைக்கழகத்தின் வேந்தரான ஆளுநர் இறுதி செய்வார் என்று தெரிவித்தார்.

அப்போது மீண்டும் குறுக்கிட்ட நீதிபதிகள் நீங்கள் எங்களுக்கு ஒன்றை தெளிவுப்படுத்த வேண்டும். அதாவது துணைவேந்தரை ஆளுநர் தான் இறுதி செய்ய வேண்டும் என்று எங்கு எந்த விதியில் எழுதப்பட்டுள்ளது என்று காட்டமாக தெரிவித்த நீதிபதிகள், ‘‘அப்துல் கலாம் பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தரை நியமிப்பதற்கான பெயர்களை கேரள அரசு மற்றும் ஆளுநர் பரிந்துரை செய்யலாம்’’ என்று உத்தரவிட்டனர்.

* துணைவேந்தர்கள் நியமனம் தமிழக ஆளுநர் பதில் மனு

தமிழ்நாட்டில் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் நியமிக்கும் விவகாரம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் மேற்கண்ட வழக்கில் தமிழ்நாடு ஆளுநர் ரவி மற்றும் யுஜிசி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் ஆளுநர் ஆர். என். ரவி தரப்பு பதிலில், ‘‘ஏற்கனவே இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் எந்த ஒரு இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என்பதால்தான் உயர் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்தது.

மேலும் துணைவேந்தர்கள் நியமனம் மற்றும் துணைவேந்தர்களை தேர்ந்தெடுப்பதற்கான குழுவை அமைப்பதில் குறைந்தபட்ச வரைமுறை கடைபிடிக்க வேண்டும் என யுஜிசியின் நெறிமுறைகள் தெளிவாக வகுத்துக் கூறப்பட்டுள்ளன. ஆனால் அதை தமிழ்நாடு அரசு முழுமையாக பின்பற்றி இருக்கிறதா என ஆராய்வதற்காகதான் சென்னை உயர்நீதிமன்றம் இந்த விவகாரத்தை விசாரித்து இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்திருக்கிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் துணைவேந்தர்கள் நியமனத்தில் ஆளுநர் முட்டுக்கட்டை போடுகிறார் என்ற வாதத்தை ஏற்க முடியாது என தெரிவித்துள்ளார்.

இதேபோன்று யுஜிசி சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், ‘‘துணைவேந்தர்கள் நியமனம் மற்றும் தேர்வு குழு உருவாக்குவதற்காக யுஜிசி விதிமுறைகளை வைத்திருக்கிறது. அதற்கு மிக முக்கிய காரணம் உயர்கல்வி துறையில் தரம் என்பது உயர்த்தப்பட வேண்டும் என்பதே ஆகும். இந்த விதிமுறைகள் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும், அரசுகளுக்கும் பொதுவானதாகும். அதை மீறும் பட்சத்தில் நீதிமன்றம் அரசின் நடவடிக்கைகளை ரத்து செய்யலாம் என தெரிவித்துள்ளது.