கும்பகோணம்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே ஆடுதுறை பேரூராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 6ம் தேதி பள்ளி மேம்பாட்டு மானியத்தில் ரூ.34 லட்சம் மதிப்பீட்டில் புதிய சுகாதார வளாகம் கட்டப்பட்டு மாணவிகள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது. இந்நிலையில் கழிவறை குறுக்கே தடுப்புகள் இல்லாமல் கட்டப்பட்டு இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவை தொடர்ந்து அந்த கழிவறையின் குறுக்கே சிறிய அளவிலான தடுப்பு சுவர்கள் கட்டப்பட்டன. இந்த பள்ளி கழிவறை விவகாரம் சர்ச்சையாகி பெரும் பேசு பொருளாக மாறியதால் ஆடுதுறை பேரூராட்சி இளநிலை பொறியாளர் ரமேஷ், செயல் அலுவலர் கமலக்கண்ணன் ஆகியோரை நேற்று பணியிடை நீக்கம் செய்து சென்னை பேரூராட்சி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
+
Advertisement