தர்மபுரி: பாலக்கோடு அருகே அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 30பேர் வாந்தி மயக்கம் அடைந்தனர். இதில் 18 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கல்சான்பயால் கிராமத்தில், அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில், சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 60க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். நேற்று மதியம் மாணவர்களுக்கு சத்துணவு வழங்கப்பட்டது.
40க்கும் மேற்பட்ட மாணவர்கள் மதிய உணவை அருந்தியுள்ளனர். சாப்பிட்ட சிறிது நேரத்தில், மாணவர்கள் சிலர் மயக்கம் வருவது போல் இருப்பதாக உணர்ந்துள்ளனர். இந்நிலையில், 30க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் திடீரென்று வாந்தியெடுத்து, பள்ளியிலேயே மயக்கம் போட்டு விழுந்துள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், 12பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது மருத்துவமனையில் 18 மாணவ, மாணவிகள் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி தகவல் அறிந்த கல்வி துறை அதிகாரிகள் பள்ளியில் சமையல் செய்தவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அதிகாரிகள் அளித்த தகவலின் பேரில், பாலக்கோடு போலீசாரும் சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.