Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

அரசுப்பள்ளி வளாகத்தில் இருந்து ராட்சத மோட்டார் மூலம் மழைநீர் வெளியேற்றம்

திருவொற்றியூர்: பெஞ்சல் புயல் காரணமாக திருவொற்றியூர் பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. இவ்வாறு தேங்கிய மழைநீரை மாநகராட்சி அதிகாரிகள் ராட்சத மோட்டார்களை வைத்து வெளியேற்றி கால்வாய்களில் விட்டனர். மேலும் அரசுப்பள்ளி வளாகங்கள், பூங்காக்கள் போன்ற இடங்களில் சுற்றுச்சுவர் உள்ளதால் மழைநீர் வெளியேற முடியாமல் தேங்கி நின்றது. இவற்றை அதிகாரிகள், ஊழியர்கள் இணைந்து வெளியேற்றினர்.

இதனிடையே பெஞ்சல் புயல் காரணமாக விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில் நேற்று அனைத்து பள்ளிகளும் வழக்கம்போல் இயங்கின. இதில் திருவொற்றியூர் ஜெய்கோபால் கரோடியா அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மழைநீர் அதிகளவில் தேங்கி நின்றது. இதனால் மாணவ, மாணவிகள் வகுப்பறைகளுக்குச் செல்ல முடியாமல் சிரமப்பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த வார்டு கவுன்சிலர் கே.பி.சொக்கலிங்கம் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் 10க்கும் மேற்பட்டோர் ராட்சத மோட்டார் பொருத்திய 2 டிராக்டர்களைக் கொண்டு வந்து சுமார் 6 மணி நேரம் தீவிர பணி மேற்கொண்டு பள்ளி வளாகத்தில் தேங்கியிருந்த மழைநீரை முற்றிலுமாக அப்புறப்படுத்தினர்.

இதேபோல் எண்ணூர் விரைவு சாலை வடக்கு பாரதியார் நகரில் மழைநீருடன் கடல் நீரும் கலந்து சாலையில் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் ராட்சத மோட்டார் மூலம் சாலையில் தேங்கிய மழைநீரை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். பல பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து திருவொற்றியூர் மண்டலத்தில் 300க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தொடர்ந்து தீவிரமாக பணியாற்றி மழைநீரை அப்புறப்படுத்தினர்.