சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை : அரசு பணி அலுவலர்கள் தங்களது பணி ஓய்வுக்கு பின், பிறரது தயவினை எதிர்பார்க்காமல் கண்ணியத்துடன் வாழ வேண்டும் என்பதற்காக பல்வேறு சட்டங்கள் மூலம் பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்பட்டது.
ஆனால் தற்போது ஒன்றிய, மாநில அரசுகள் சேவைப் பணியான அரசு பணி ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மாற்றி புதிய ஓய்வூதிய திட்டத்தின்படி, மத்திய அரசு ஓய்வூதிய நிதியினை பராமரிக்க ஓய்வூதிய ஒழுங்காற்று ஆணையத்தை உருவாக்கி அதன் வாயிலாக நிதி மேலாண்மை செய்யும் நிலையில், தமிழக அரசு இந்த ஆணையத்தில் சேராததால் 31.3.2025 வரை ஓய்வு பெற்ற சுமார் 45,625 அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படவில்லை.
பணிக்கொடை கூட அரசு ஊழியர்களுக்கு வழங்கபடவில்லை. அரசின் பங்களிப்பு தொகை மட்டும் வட்டியுடன் மொத்தமாக அளித்து வீட்டுக்கு அனுப்பி வைக்கும் அவல நிலை உள்ளது. அரசு ஊழியர்கள் பணியின் போது இறக்கும் தருவாயிலும், உடல் நல குறைபாடு ஏற்பட்டு பணியிலிருந்து விலகும் தருவாயில் அரசு ஊழியர்கள் குடும்பங்களுக்கு எவ்வித சட்டபூர்வமான நிதி உதவியும் வழங்கப்படுவதில்லை.
அரசின் திட்டங்களை மக்களிடத்தில் கொண்டு செல்வதோடு மட்டுமல்லாமல் மக்களின் குறைகளை நிவர்த்தி செய்வதிலும், இயற்கை சீற்றங்கள், பேரிடர் காலங்கள், பெருநோய் தொற்றுகள் போன்ற அத்தியாவசிய சமயங்களிலும் தொய்வின்றி பணியாற்றும் அரசு அலுவலர்கள், எதிர்கால தலைமுறையை வளமானதாக மாற்றும் ஆசிரியர்களுக்கும் மக்களுக்காக பணியாற்றுபவர்களின் நியாயமான கோரிக்கையை இனியும் கிடப்பில் போடுவது ஏற்புடையது அல்ல.
கடந்த 22 ஆண்டுகளாக போராடிவரும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் தமிழகத்தில் பழைய ஓய்வு திட்டத்தை உடனே நடைமுறைப்படுத்த அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.