சென்னை: தங்கம் விலை கடந்த செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் வரலாறு காணாத வகையில் உயர்ந்து வந்தது. அதன் பிறகு இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 4ம் தேதி தங்கம் விலை பவுனுக்கு ரூ.800 குறைந்து ஒரு பவுன் ரூ.90 ஆயிரமாகவும், 5ம் தேதி தங்கம் விலை பவுனுக்கு ரூ.560 குறைந்து ஒரு பவுன் ரூ.89,440 ஆகவும் விற்பனையானது. 2 நாட்களில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,360 வரை குறைந்தது. இது நகை வாங்குவோருக்கு ஆறுதலை அளித்து இருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் தங்கம் விலை மீண்டும் அதிகரித்தது.
நேற்று முன்தினம் காலையில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.560, மாலையில் பவுனுக்கு ரூ.560 என ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1120 உயர்ந்தது. இதன் மூலம் ஒரு பவுன் ரூ.90,560க்கு விற்பனையானது. வெள்ளி விலையும் காலை, மாலை என கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் ரூ.165க்கும், கிலோவுக்கு ரூ.2 ஆயிரம் அதிகரித்து, பார்வெள்ளி ஒரு 1 லட்சத்து 65,000 ரூபாய்க்கும் விற்பனையானது. இந்த நிலையில் நேற்று தங்கம் விலை மீண்டும் குறைந்தது. நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ.11,270க்கும், பவுனுக்கு ரூ.400 குறைந்து, ஒரு பவுன் ரூ.90,160க்கும் விற்பனையானது. வெள்ளி விலையை பொறுத்தவரையில், விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.165க்கும், பார் வெள்ளி 1 லட்சத்து 65,000ரூபாய்க்கும் விற்பனையானது.

