Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தங்கம் விலை ெதாடர்ந்து மாற்றம்; சவரன் 2 நாட்களில் ₹360 குறைந்தது

சென்னை: தங்கம் விலை ெதாடர்ந்து 2 நாட்களில் சவரன் ₹360 குறைந்துள்ளது. தங்கத்தின் விலை கடந்த மார்ச் மாதத்தில் இருந்து ஜெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது. இப்படியே உயர்ந்து மார்ச் 28ம் தேதி ஒரு சவரன் தங்கம் ₹50 ஆயிரத்தை தொட்டது. ஏப்ரல் 19ம் தேதி சவரன் ₹55 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை தொட்டது. இந்த விலை உயர்வு நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சியடைய செய்தது. சவரன் 55 ஆயிரத்தை தாண்டிய பிறகு தங்கம் விலையில் மாற்றம் காணப்பட்டது. அதாவது, தங்கம் விலை குறைவதும், அதிகரிப்பதுமாக இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 10ம் தேதி தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ₹1240 வரை உயர்ந்து, ஒரு சவரன் ₹54,160க்கு விற்பனை செய்யப்பட்டது. அன்றைய தினம் அட்சயதிருதியை ஆகும்.

அட்சயதிருதியை அன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து நகை வாங்குவோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இருந்த போதிலும் அட்சயதிருதியை அன்று குண்டுமணி தங்கமாவது வாங்க வேண்டும் என்ற ஆசையில், விலையை பொருட்படுத்தாமல் நகைகளை வாங்கி சென்றனர். தொடர்ந்து 11ம் தேதி தங்கம் விலை கிராமுக்கு ₹20 குறைந்து ஒரு கிராம் ₹6,750க்கும், சவரனுக்கு ₹160 குறைந்து ஒரு சவரன் ₹54,000க்கும் விற்கப்பட்டது. நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை ஆகும். அதனால் தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை.

ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு நேற்று தங்கம் மார்க்கெட் தொடங்கியது. அதில் தங்கம் விலை மேலும் சற்று குறைந்திருந்தது. அதாவது, கிராமுக்கு ₹25 குறைந்து ஒரு கிராம் ₹6,725க்கும், சவரனுக்கு ₹200 குறைந்து ஒரு சவரன் ₹53,800க்கும் விற்கப்பட்டது. அதே நேரத்தில் 2 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ₹360 குறைந்துள்ளது. இந்த விலை குறைவு நகை வாங்குவோருக்கு சற்று மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.