ஒரு லட்சத்தை நெருங்கும் ஆபரணத் தங்கத்தின் விலை : சவரனுக்கு ரூ.2,400 உயர்ந்து ரூ. 97,600க்கு விற்பனை!
சென்னை: தங்கம் விலை கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து அதிரடியாக உயர்ந்து வருகிறது. அதுவும் தினம், தினம் புதிய உச்சம் என்ற அளவில் தங்கம், வெள்ளி விலை உயர்வு என்பது இருந்து வந்தது. இந்த விலை உயர்வு இந்த மாதமும் தொடர்கிறது.அதுவும் வழக்கத்துக்கு மாறாக காலை, மாலை என இரண்டு வேளையும் விலையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இதனால், தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை பதிவு செய்து வருகிறது. இன்றைய நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,400 உயர்ந்து ரூ. 97,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் விலை கிராம் ரூ.300 உயர்ந்து ரூ.12,200க்கும்விற்பனையாகிறது.
கடந்த 5 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.5,600 கூடியுள்ளது. வரும் 20ம் தேதி தீபாவளி பண்டிகை வருகிறது. தீபாவளி சமயத்தில் நிறைய பேர் நகை வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நிலையில் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது நகை வாங்க காத்திருப்பவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.அதே நேரத்தில் தீபாவளி வரை தங்கம் விலை உயர தான் அதிக வாய்ப்பு உள்ளதாக நகை வியாபாரிகள் கூறியுள்ளனர். தங்கம் தான் வழக்கமாக உயர்ந்து வரும். ஆனால், தற்போது தங்கத்திற்கு இணையாக போட்டி போட்டு வெள்ளி விலையும் உயர்ந்து கிராம் ரூ.200ஐ தாண்டியது. இதற்கு முக்கிய காரணமாக, வெள்ளியின் மீதான முதலீடு தான் காரணம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.3 குறைந்து ரூ.203க்கு விற்பனையாகிறது.