ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,960 உயர்ந்து ரூ.94,600க்கு விற்பனை: வெள்ளியும் போட்டி போட்டு எகிறியது!!
சென்னை: தங்கம் விலை கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து அதிரடியாக உயர்ந்து வருகிறது. அதுவும் தினம், தினம் புதிய உச்சம் என்ற அளவில் தங்கம், வெள்ளி விலை உயர்வு என்பது இருந்து வந்தது. இந்த விலை உயர்வு இந்த மாதமும் தொடர்கிறது.அதுவும் வழக்கத்துக்கு மாறாக காலை, மாலை என இரண்டு வேளையும் விலையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இதனால், தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை பதிவு செய்து வருகிறது. இன்றைய நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.1,960 உயர்ந்து ரூ.94,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.245 அதிகரித்து ஒரு கிராம் ரூ.11,825க்கு விற்பனையாகிறது.
வரும் 20ம் தேதி தீபாவளி பண்டிகை வருகிறது. தீபாவளி சமயத்தில் நிறைய பேர் நகை வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நிலையில் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது நகை வாங்க காத்திருப்பவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. தங்கம் தான் வழக்கமாக உயர்ந்து வரும். ஆனால், தற்போது தங்கத்திற்கு இணையாக போட்டி போட்டு வெள்ளி விலையும் உயர்ந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக, வெள்ளியின் மீதான முதலீடு தான் காரணம் என்று கூறப்படுகிறது. இன்றைய நிலவரப்படி, சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.9 உயர்ந்து ரூ.206க்கும் விற்பனையாகிறது.