நெல்லை: ஆடி மாத கடைசி செவ்வாயை முன்னிட்டு மேலப்பாளையம் சந்தையில் இன்று ஆடுகள் விற்பனை களைக்கட்டியது. இன்றும், நாளையும் பல்வேறு கோயில்களில் கொடை விழாக்களை முன்னிட்டு வெள்ளாடுகள் விற்பனை அதிகரித்தது. ஆடி மாதத்தில் அம்மன் கோயில்கள், சுடலைமாடசாமி, முண்டன், பட்டவராயன் உள்ளிட்ட கோயில்களில் அதிக அளவில் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். அதிலும் ஆடி மாதத்தில் முதல் செவ்வாய், முதல் வெள்ளி மற்றும் கடைசி செவ்வாய், கடைசி வெள்ளி ஆகிய தினங்களில் கொடை விழாக்கள் அதிகம் நடைபெறும். இத்தகைய கொடை விழாக்களில் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளின் மறுதினமான புதன் அல்லது சனிக்கிழமைகளில் கிடா வெட்டு நடைபெறும். இதற்காக பக்தர்கள் அந்தந்த பகுதிகளில் நடைபெறும் ஆட்டு சந்தைகளில் நேரடியாக சென்று வியாபாரிகளிடமிருந்து ஆடுகளை வாங்கி செல்வது வழக்கம்.
அந்த வகையில் மேலப்பாளையம் கால்நடை சந்தையில் ஆடி மாதம் முழுவதுமே கிடாக்கள் விற்பனை அதிகம் காணப்பட்டது. இந்நிலையில் இன்று ஆடிமாத கடைசி செவ்வாய் கிழமையை ஒட்டி நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வந்து கிடாக்களை வாங்கி சென்றனர். மேலும் மதுரை, தேனி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் சந்தைக்கு வந்து ஆடுகளை வாங்கி சென்றனர். இதனால் மேலப்பாளையம் சாலை முழுவதிலும் இன்று வியாபாரிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. ஆயிரக்கணக்கில் ஆடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டிருந்தது. செம்மறி ஆட்டு வகைகள் ஒரு ஜோடி ரூ.40 ஆயிரம் வரை விற்பனையானது. ஆடுகளும், வியாபாரிகளும் அதிக அளவில் வந்திருந்தாலும் ஆடி மாதத்தை முன்னிட்டு அவற்றின் விலையும் அதிகமாக இருந்தது.
குறிப்பாக வெள்ளாடுகளின் விலை மற்ற மாதங்களை விட கூடுதலாக இருந்தது. சந்தைக்கு வெளியே சாலையில் ேகாழிகள் விற்பனையும் களைக்கட்டியிருந்தது. கோயில்களில் சேவல்களை பலியிடுவோர், அதிகளவில் அவற்றை வாங்கி சென்றனர்.